அதிமுகவுக்கு திரும்பும் ஓபிஎஸ் & டிடிவி தினகரன்? ஒரு நொடி யோசித்து ஆர்பி உதயகுமார் கொடுத்த பதில்
சென்னை: அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு அதிமுக மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். பி. உதயகுமார் அளித்த பதில் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
தமிழ்நாட்டில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கான பணிகளைக் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுமே தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள்.. மற்றொரு பக்கம் பிரச்சாரம் என்றே அனைத்து அரசியல் கட்சிகளும் இறங்கியுள்ளனர்.

அதிமுக
அதிமுகவைப் பொறுத்தவரை அவர்கள் பாஜகவுடன் என்டிஏ கூட்டணியில் இருக்கிறார்கள். கூட்டணிக்கு மற்ற கட்சிகளை அழைத்து வரும் முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், இரட்டை இலை வாக்குகள் பிரியாமல் இருக்க ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரையும் உள்ளே அழைத்து வரும் முயற்சிகளும் நடந்து வருகிறது.
குறிப்பாகப் பிரிந்து சென்றவர்களை நீக்க வேண்டும் என்பதில் பாஜக ஆர்வம் காட்டி வருகிறது. இருப்பினும், அவர்களை அதிமுகவில் மீண்டும் இணைக்கவே முடியாது என்பதில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக இருக்கிறாராம். அதேநேரம் அவர்கள் கட்சியை என்டிஏ கூட்டணியில் கொண்டு வந்தால்.. அதற்கு ஓகே என எடப்பாடி சொன்னதாகத் தெரிகிறது. இதனால் அதற்கான நடவடிக்கைகள் சீக்கிரம் ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. இது தொடர்பான கேள்விக்கு மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். பி. உதயகுமார் அளித்த பதில் கவனம் ஈர்ப்பதாக அமைந்துள்ளது.
உதயகுமார்
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆர். பி. உதயகுமாரிடம் முதலில் செங்கோட்டையன் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "இது தொடர்பாக ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பதிலளித்துவிட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஒருவர் குறித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை என எடப்பாடி மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அதைத் தாண்டி நான் வேறு என்ன சொல்ல முடியும்" என்று மட்டும் பதிலளித்தார்.
தேர்தல் பணிகள்
தேர்தல் குறித்த கேள்விக்கு, "தமிழ்நாட்டில் எப்போதும் அதிமுக தான் தேர்தல் களத்தில் முதலில் பணிகளை ஆரம்பிக்கும். இந்தாண்டும் கூட எழுச்சி பயணம் என்ற பெயரில் பிரச்சாரத்தை முதலில் தொடங்கியது நாங்கள் தான். இதுவரை 175+ தொகுதிகளுக்கு எடப்பாடி போய்விட்டார். இப்போது விருப்பமனு தரும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல் நாளில் மட்டும் 1500 பேர் விருப்பமனுக்களை சமர்ப்பித்தனர். வரும் நாட்களிலும் இந்த எண்ணிக்கை நிச்சயம் அதிகரிக்கவே செய்யும். அதை விட அதிகம் பேர். இப்படித் தேர்தல் களத்தில் எப்போதும் நாங்கள் முதன்மையாக இருப்போம்" என்று அவர் கூறினார்.
தை பிறந்தால்
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவார்களா என்ற கேள்விக்கு அவர், "எல்லாக் கேள்விகளுக்கும் தை பிறந்தால் வழி பிறக்கும். நிச்சயமாக 2026ல் அதிமுக தலைமையிலான கூட்டணியே வென்று ஆட்சியை அமைக்கும். தேர்தலுக்கு முன்பு வழி பிறக்கும் சந்தேகமே வேண்டாம்" என்று அவர் பதிலளித்தார்.
பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வாய்ப்பில்லை என அவர் சொல்லவில்லை. மாறாக தை மாதம் எல்லாச் சிக்கலும் சரியாகும் என அவர் கூறியிருக்கிறார். இதனால் அடுத்த மாதமே அதிமுகவில் மிக முக்கிய மாற்றம் வரக்கூடும் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்!












Click it and Unblock the Notifications