சென்னை மண்டலத்தில் இரவு நேரங்களில் சட்டவிரோத மது விற்பனை.. ஆய்வு செய்ய டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவு
சென்னை: சென்னை மண்டலத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் சட்டவிரோத மதுவிற்பனையை தடுக்க, ஆய்வு நடவடிக்கையை தீவிரப்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரத்தை குறைத்து அரசு உத்தரவிட்டது. இதன்படி பகல் 12 மணியில் இருந்து இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது.

ஆனால் சில மண்டலங்களில் உள்ள டாஸ்மாக் பார்கள் மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோத மதுவிற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
குறிப்பாக தலைநகர் சென்னை மண்டலத்தில் இரவு நேர சட்டவிரோத மதுவிற்பனை நடப்பதாக டாஸ்மாக் நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன. மூலக்கடை, எண்ணூர், ரெட்டேரி, அம்பத்தூர், ஐயப்பாக்கம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுதும் சட்டவிரோத மதுவிற்பனை நடப்பதாக குற்றச்சாட்டுகள் குவிந்தன
காலை 6 மணி முதல் தங்கு தடையின்றி சரக்கு கிடைப்பதாகவும் இரவு எந்நேரமானாலும் மதுவிற்பனை சட்டவிரோதமாக நடப்பதாகவும் புகார்கள் எழுந்தன.
இதனையடுத்து, சென்னை மண்டலத்தில் இரவு நேரங்களில் நடைபெறும் சட்டவிரோத மது விற்பனையை தடுக்க மாவட்ட மேலாளர்கள் மற்றும் முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை நகரை காட்டிலும் புறநகர் பகுதிகளில் தான் இரவு முழுவதும் சட்டவிரோதமாக மது விற்பனை அதிகம் நடைபெறுகிறது.
எனவே நிர்வாகத்தின் உத்தரவுப்படி ஆய்வில் ஈடுபட உள்ள அதிகாரிகள் விரைவில் அறிக்கை தயார் செய்வார்கள். அதிகாரிகளின் அறிக்கையின்படி சட்டவிரோத மது விற்பனையை தடுக்க டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications