அஜித் குமார் கேஸ் தீவிரம் அடையும்.. நேரம் பார்த்து.. நிகிதா எடுத்த முக்கிய முடிவு! அப்போ அந்த புகார்
சென்னை: அஜித் குமார் காவல் நிலைய மரண வழக்கு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில், அஜித் குமார் மீது புகார் அளித்த நிகிதா, திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார். பரபரப்பான சூழலுக்குப் பிறகு அவர் மீண்டும் பணியில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரியில் பணியாற்றும் நிகிதா மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் மீது பல மாணவிகள் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டே அவர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், அவர் மீண்டும் பணிக்கு வந்துள்ளார்.

தாவரவியல் துறைத் தலைவராகப் பணியாற்றிய நிகிதா, தனது பொறுப்புகளைச் சரிவர நிறைவேற்றவில்லை என்றும், கல்லூரி நிர்வாகத்தின் உத்தரவுகளை ஏற்க மறுத்ததாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவரை பணியிடமாற்றம் செய்யக் கோரி மாணவிகள் அளித்த மனுக்களைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மே மாதம் இதுகுறித்து விசாரிக்க கல்லூரி கல்வி இணை இயக்குனருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
விசாரணைக்குப் பின், இணை இயக்குனர் குற்றச்சாட்டுகளை உறுதி செய்து, கல்லூரி கல்வி இயக்குனருக்கு விரிவான அறிக்கை சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது. அந்த அறிக்கை பல நாட்களாக மேஜையில் உறங்குவதாகப் புகார்கள் எழுந்தன. அப்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், தற்போது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நிகிதா மீது புகார்
இளைஞர் அஜித் குமார், போலீசார் நடத்திய விசாரணையில் கொடுமைப்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிகிதா என்ற பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டார். தற்போது தாய் சிவகாமியுடன் வசித்து வரும் நிகிதா, தாய்க்கு ஸ்கேன் எடுப்பதற்காக மதுராபுரம் கோவிலுக்குச் சென்றபோது நகை திருட்டு புகார் அளித்துள்ளார். இதன் காரணமாகவே அஜித்குமார் மரணம் நிகழ்ந்துள்ளது. மதுராபுரம் கோவிலில் தனது அம்மாவிற்கு சக்கர நாற்காலி (வீல் சேர்) வேண்டும் என்று நிகிதா கேட்டதற்கு, காவலாளி அஜித் குமார் ரூ.500 கேட்டுள்ளார். அதற்கு ரூ.100 தருவேன் என்று நிகிதா கூறிய நிலையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த நிகிதா நகை காணவில்லை என்று பொய் வழக்கு போட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், ஐஏஎஸ் மூலம் போலீசாருக்கு பிரஷர் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா என்பவர் ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி சுமார் 16 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததாக 2011ஆம் ஆண்டு நிகிதா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொடரும் புகார்கள்
நிகிதா, 2010ஆம் ஆண்டில் துணை முதல்வரின் உதவியாளரைத் தனக்குத் தெரியும் என்று கூறி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டபோது, நிகிதாவின் குடும்பத்தினர் அவர்களை மிரட்டியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஒருவர் கூறுகையில், "கடந்த 10 நாட்களுக்கு முன்னர் கூட, நிகிதா குடும்பத்தினரிடம் மோசடி செய்த எங்களது பணத்தை திருப்பித் தர வேண்டும் என கேட்டோம். ஆனால் அப்போதும் எங்களை நிகிதா குடும்பம் மிரட்டியது. நிகிதாவால் பாதிக்கப்பட்ட எங்களுக்கும் நீதி வேண்டும்" என்று தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அஜித்குமார் மரண வழக்கில் தொடர்புடைய நிகிதாவின் மீது ஏற்கனவே பல்வேறு புகார்கள் நிலுவையில் உள்ள நிலையில், அவர் மீண்டும் பணிக்குச் சேர்ந்திருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications