எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்துக்கு எதிரான வழக்கு.. ஐகோர்ட் நீதிபதிகள் கேட்ட கேள்வி!
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவதூறாகப் பேசியதால் அவரது பிரச்சாரத்துக்கு தடை விதிக்கக் கோரி பெங்களூர் புகழேந்தி தொடர்ந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளது. பிரச்சாரம் நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் தீவிரமாக இறுதிக்கட்ட பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டசபை தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கும் வேளையில், அப்படி தேர்தல் பிரச்சாரத்திற்காக செல்லும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மாறி மாறி குற்றச்சாட்டை முன் வைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். தனிப்பட்ட தாக்குதல்களிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது பிரசாரங்களில் சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்த போட்டோவை காண்பித்து விமர்சனம் செய்து வருகிறார். இதனால் எடப்பாடி பழனிச்சாமியும் உதயநிதி பால்டாயில் குடித்தவர் என்று தரக்குறைவான கருத்தை முன்வைத்தார். அதுமட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் பற்றி எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், புரட்சி அதிமுக-வின் முதன்மை செயலாளரான பெங்களூரு வா. புகழேந்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி அவதூறு பிரச்சாரம் மேற்கொள்வதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் அவதூறாக பேசி வரும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தர விட வேண்டும். அவர் மேற்கொண்டு பிரச்சாரம் செய்யத் தடை விதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், "அவதூறு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டது. தனி நபராக முதலமைச்சருக்கு எதிரான அவதூறு கருத்துகளை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரமாக இருந்தாலும், தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்துவது தடை செய்யப்பட்டது. பொதுவாக, அரசை விமர்சித்துப் பேசுவதற்கும், குற்றச்சாட்டுக்களுடன் பேசுவதற்கும் தடை இல்லை" எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாக எடப்பாடி பழனிசாமியின் பிரச்சாரத்தை நிறுத்த முடியும். ஆனால், தேர்தல் நேரங்களில் அனைவரும் பேசுகிறார்கள்? யாரை நிறுத்துவது? மனுதாரரை குறிப்பிட்டு பேசியிருந்தால் நிவாரணம் கோரலாம்' எனத் தெரிவித்தனர்.
மேலும், "மற்றொரு நபரை பேசியதற்காக மனுதாரர் எப்படி நிவாரணம் கோர முடியும்? தனி நபருக்கு எதிரான புகாரை பொதுநல வழக்காக எடுக்க முடியாது" எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை தள்ளுபடி செய்தனர்.












Click it and Unblock the Notifications