இனி வாரந்தோறும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் இல்லை.. தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் இனி கொரோனா வார தடுப்பூசி முகாம்கள் இல்லை என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்த நேரத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகமாக இருந்தன. கொரோனா தொற்றை குறைக்க மாஸ்க், சமூக இடைவெளி அவசியம் என அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
மேலும் கொரோனாவை ஒழிக்க கொரோனாவின் இரு தவணை தடுப்பூசிகளே சிறந்தது என உலக சுகாதார நிறுவனம், உள்ளூர் சுகாதாரத் துறையும் அறிவுறுத்தியிருந்தன.

தடுப்பூசிகள்
மக்களுக்கு தடுப்பூசிகள் எளிதாக கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. இதையடுத்து வாரந்தோறும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. வணிக வளாகங்கள், மக்கள் கூடும் இடங்கள், அபார்ட்மென்டுகளில் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது.

27 வாரங்கள்
இதுவரை 27 வாரங்கள் இந்த தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து கொரோனா வழிகாட்டும் நெறிமுறைகளை இனி பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என அரசு அறிவித்துள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி, முகக்கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை சுய விருப்பத்தின் அடிப்படையில் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தடுப்பூசி கட்டாயமில்லை
அது போல் கொரோனா தடுப்பூசியும் இனி கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இனி கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்படாது என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்துவிட்டதால் தடுப்பூசி முகாம் இனி நடத்தப்படாது.

மாவட்ட நிர்வாகம்
தேவைப்பட்டால் அந்தந்த பகுதிகளில் மாவட்ட நிர்வாகம் நடத்திக் கொள்ளலாம். தமிழகத்தில் இதுவரை 27 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. கொரோனாவை கட்டுப்படுத்த நடத்தப்பட்ட முகாம்களால் 4 கோடி பேர் பயனடைந்தனர். தமிழகத்தில் முதல் தவணை தடுப்பூசியை 92% பேரும் 2 தவணையை 73% பேரும் போட்டுள்ளனர் என சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications