'நினைத்ததை' முடித்த அமித் ஷா.. கிளைமேக்ஸ் நோக்கி 'மிஷன் மம்தா' - திருப்பி அடிப்பாரா?
சென்னை: இதோ நடந்துவிட்டது. மம்தா பானர்ஜி எது நடக்கக்கூடாது என்று நினைத்தாரோ அது நடந்துவிட்டது. சுவேந்து அதிகாரியைத் தொடர்ந்து, அவரது தந்தையும் பாஜகவில் இணைந்துவிட்டார்.
என்னதான் பாஜகவை கொள்கை ரீதியாக மற்ற கட்சிகள் எதிர்த்தாலும், அவர்களின் வியூகம், தேர்தல் கூட்டணி திட்டம் போன்றவற்றை கண்டு எதிர்க்கட்சியினர் வியந்து போகின்றனர் என்பது தான் உண்மை. இதனை சமீபத்தில் பேசிய தயாநிதி மாறன் கூட ஒப்புக் கொண்டுள்ளார்.
தற்போது அதே வியூகத்தை, ஸ்டிராடஜியை மேற்குவங்கத்தில் மிக நேர்த்தியாக செயல்படுத்தி வரும் பாஜக, முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பெரும் குடைச்சல் கொடுத்து வருகின்றனர்.
மேற்கு வங்கம்.. சர்வே ஓகே.. ஆனா, வரப்போவது பாஜக ஆட்சிதான்? கவலையில் மம்தா பானர்ஜி.. காரணம்
பெரிய தாவல்
திரிணாமுல் காங்கிரஸ் அரசில் அமைச்சகராக பணியாற்றிய சுவேந்து அதிகாரி அண்மையில் பாஜகவில் சேர்ந்து, சட்டப்பேரவைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து களம் இறங்கி உள்ளார். 2021 தேர்தலில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய விக்கெட்டாக அமைந்தது சுவெந்து தாவல் தான்.
பாஜக வியூகம்
தாவியது மட்டுமின்றி, மம்தாவும் இவரும் நேருக்கு நேர் களம் காண்கின்றனர். 'நந்திகிராம் தொகுதியில் முடிந்தால் போட்டியிட்டு பாருங்கள்' என்று சுவெந்து சவால் விடுக்க, 'என்னிடமா சவால் விடுகிறாய்?' என்று கர்ஜித்த மம்தா, நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுவதாய் அறிவித்து பாஜகவுக்கு ஷாக் கொடுத்தார். பாஜகவின் வியூகமும் அதுதான்.
அது மம்தாவுக்கு தெரியும்
மம்தா பானர்ஜி மேற்குவங்கத்துக்கே முதல்வராக இருந்தாலும், நந்திகிராம் சுவெந்து அதிகாரியின் கோட்டை என்பது மம்தாவுக்கே தெரியும். அதனால் தான், மம்தாவை உசுப்பேற்ற சுவெந்து சவால் விடுக்க, அது வியூகம் தெரிந்தே, மம்தாவும் அங்கு போட்டியிடுகிறார். இதனால், அங்கு ஈகோ என்பதையெல்லாம் தாண்டி, வேற லெவலில் மோதல் அரங்கேறியிருக்கிறது.
பாஜகவில் ஐக்கியம்
இந்நிலையில், சுவெந்து அதிகாரியின் தந்தை சிஸர் அதிகாரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி.யாக உள்ளார். அவரும் பாஜகவில் இணையக்கூடும் என தகவல்கள் வெளியான நிலையில், இன்று அமித் ஷா முன்பு பாஜகவில் இணைந்தார். மேற்குவங்க மாநிலம் ஈகராவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அக்கட்சிக்கு ஆதரவு திரட்டினார். இந்தக் கூட்டத்தில் தான் சிஸிர் அதிகாரி பங்கேற்று பாஜகவில் இணைந்தார்.
சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு
பிறகு, பேசிய சிஸர் அதிகாரி, "என் மகன் நந்திகிராம் தொகுதியில் வெல்வது உறுதி. இது குறித்து எந்த சந்தேகமும் இல்லை. இந்த சட்டமன்ற தேர்தல் நமது கௌரவத்தை காப்பாற்றுவதற்கான ஒரு போராகும், வன்முறை வெறியாட்டத்தில் இருந்து மேற்கு வங்காளத்தை காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். மாநிலத்தில் மிக மோசமான சூழல் உள்ளது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது. மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை இழந்து விட்டார். மேற்குவங்கத்தை பாஜகாவல் மட்டுமே காப்பாற்ற முடியும்" என்று பேசினார்.
டாப் வியூகம்
இதனால் மம்தா பானர்ஜி கோபம் ஒருபக்கம் அதிகரிக்க, அதை பயன்படுத்தி அவரை நிலைகுலைய வைப்பதே முக்கிய வியூகம் என்று டெல்லி வட்டாரத்தில் கூறப்படுகிறது. எனினும், மம்தா இதைப்பற்றி துளியும் கவலைப்படாமல், சுவெந்து அதிகாரியை வீழ்த்தும் பல வியூகங்களை வகுத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறாராம். காரணம் அங்கு மம்தாவுடன் கைக்கோர்த்து நிற்பது பிரசாந்த் கிஷோர் என்பது குறிப்பிடத்தக்கது.