செந்தில் பாலாஜி மீது பழி வாங்கும் நோக்கமில்லை.. மனுவை தள்ளுபடி செய்யுங்கள்.. அமலாக்கத்துறை பதில்
சென்னை: செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கம் எதுவும் இல்லை என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு அமலாக்கத் துறை சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில் மனுவில் இதனை தெரிவித்துள்ளது.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

குற்றச்சாட்டுகள் பதிவு செய்வதற்காக அவரை பிப்ரவரி 16-ல் ஆஜர்படுத்தும்படி உத்தரவிட்டிருந்த நிலையில், அமலாக்கத் துறை வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் அமர்வு நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் குற்றச்சாட்டு பதிவு செய்யும் நடைமுறை மேற்கொள்ளப்படாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜி மனுவில், தனக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு முகாந்திரமில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விடுவிக்க கோரிய மனு மீது உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை குற்றச்சாட்டுகள் பதிவை தள்ளிவைக்கவும் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனு குறித்து அமலாக்கத் துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மார்ச் நான்காம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இன்றைய தினம் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது அமலாக்கத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் செந்தில் பாலாஜி மீது பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதியவில்லை. வழக்கு விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவே செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜி எந்தப்பக்கம் போனாலும் அமலாக்கத்துறை செக் வைக்கிறது. ஜாமீன் கிடைப்பதில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வரும் அமலாக்கத்துறை, வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்துள்ள மனுவையும் தள்ளுபடி செய்யக்கோரியுள்ளது.












Click it and Unblock the Notifications