பெண்கள் சந்திக்கும் மெனோபாஸ் பிரச்சனை.. எங்களிடம் கொள்கை இல்லை - மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
சென்னை: பெண்கள் மெனோபாஸ் காலத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தொடர்பாக மத்திய அரசிடம் எந்தவிதமான கொள்கைகளும் இல்லை என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்து இருக்கிறார்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் மக்களவையில், "அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் மெனோபாஸ் தொடர்பாக ஏதேனும் மருத்துவ கொள்கைகளை மத்திய அரசு அறிமுகம் செய்யும் முடிவில் இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
இந்த திட்டம் ஆலோசனையில் இருந்தால் அது குறித்த விபரங்களை வெளியிடுங்கள் என்றும், இல்லையென்றால் ஓராண்டிற்குள் அந்த திட்டத்தை அறிமுகம் செய்யும் நோக்கம் மத்திய அமைச்சரவைக்கு இருந்தால் கூறுங்கள் என்றார்.

மெனோபாஸ் கொள்கை
"எதிர்காலத்தில் மெனோபாஸ் தொடர்பான கொள்கைகளை எப்போது அறிமுகம் செய்வீர்கள்? அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் மெனோபாஸ் காலத்தில் சந்திக்கும் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் எதிர்கொள்ளும் சிக்கல்கள் தொடர்பாக விழிப்புணர்வுகளை அரசு முன்னெடுத்து உள்ளதா?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

ஸ்மிருதி இரானி பதில்
இது குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளித்து இருக்கிறார். அதில், "பெண்களின் வயது அதிகரிக்கும்போது ஏற்படும் இயல்பான உடல்நலன் சார்ந்த விசயம்தான் மெனோபாஸ். 45 முதல் 55 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு இது பெரும்பாலும் ஏற்படும். ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் மாதவிடாய் ஏற்படாமல் இருந்தால் அவர்கள் மெனோபாஸ் காலத்தில் உள்ளனர் என்று பொருள்.

கொள்கை இல்லை
மெனோபாஸ் காலத்தில் சிலருக்கே லேசான பக்கவிளைவுகள் ஏற்படும். சிலருக்கு எந்தவிதமான பக்க விளைவுகளோ பாதிப்புகளோ இருக்காது. ஒரு சிலர் இதனால் தீவிரமாக பாதிக்கப்படலாம். மெனோபாஸ் காலத்தை பெண்கள் தவிர்க்க இயலாது. அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியக்கூடிய பெண் தொழிலாளர்களுக்கு மெனோபாஸ் கொள்கை ஏதும் வகுக்கப்படவில்லை.

ஆய்வு அவசியம்
அதற்கு முன்பாக மெனோபாஸ் காலத்தில் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்த நிபுணர்களுடன் ஆலோசித்து அனைத்து விதமான அம்சங்களையும் பரிசீலனை செய்திட வேண்டும். மாதவிடாய் மற்றும் அது குறித்த இதர விசயங்கள் தொடர்பாக மத்திய அரசு பல திட்டங்கள், விளம்பரங்கள், நாடங்களை மேற்கொண்டு வருகிறது." என்றார்.












Click it and Unblock the Notifications