அண்ணாவின் புதல்வர்களால் செதுக்கப்பட்ட வரலாறு.. யாராலும் மாற்றி எழுத முடியாது.. காயத்ரி ரகுராம்
சென்னை: அண்ணாதுரையின் புதல்வர்களாலும்/தலைவர்களாலும் செதுக்கப்பட்ட அந்த மகத்தான வரலாற்றை யாராலும் அழிக்கவோ, மாற்றவோ அல்லது மாற்றி எழுதவோ முடியாது. அவர்களின் சாதனைகள், தியாகங்கள், சமூக நீதி சீர்திருத்தங்கள், நலத்திட்டங்கள், வளர்ச்சி மற்றும் மக்களுக்கான அயராத சேவை ஆகியவை தமிழ்நாட்டின் இதயத்தில் என்றும் நீங்காத இடம்பிடித்துள்ளன என்று அதிமுக மாநில மகளிரணி துணை செயலாளர் காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
தவெக தலைவர் விஜய் ஆட்சிக்கு வருவதை தடுக்க திமுக அதிமுக இணைந்து ஆட்சியமைக்க வேண்டும் என்று இரு தரப்பில் இருந்து குரல்கள் எழத்தொடங்கி உள்ளன. இதனை நாட்களாக யாரை எதிர்த்து அரசியல் செய்தார்களோ, அவர்களுடனே சேர்ந்து ஆட்சியமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இரு கழகங்களுமே முதலில் பரிசீலித்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால் பின்னாளில் அதிமுக, திமுக இரண்டுமே மறுத்துவிட்டன. எனினும் இன்னமும் நீர் பூத்த நெருப்பாக ஊடகங்களில் தகவல்கள் பரவிய வண்ணம் தான் இருக்கின்றன. அதுபற்றி விவாதங்கள் தற்போது அதிகமாகிவிட்டது.

இந்த சூழலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில மகளிர் அணி துணைச் செயலாளரும், நடிகையுமான காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறுகையில், "பேரறிஞர் சி.என். அண்ணாதுரையின் புதல்வர்களாலும்/தலைவர்களாலும் செதுக்கப்பட்ட அந்த மகத்தான வரலாற்றை யாராலும் அழிக்கவோ, மாற்றவோ அல்லது மாற்றி எழுதவோ முடியாது. அவர்களின் சாதனைகள், தியாகங்கள், சமூக நீதி சீர்திருத்தங்கள், நலத்திட்டங்கள், வளர்ச்சி மற்றும் மக்களுக்கான அயராத சேவை ஆகியவை தமிழ்நாட்டின் இதயத்தில் என்றும் நீங்காத இடம்பிடித்துள்ளன.
அண்ணாவின் பாதை என்பது வெறும் அரசியல் பயணம் மட்டுமல்ல; அது ஒரு உணர்வு, ஒரு கொள்கை. சாமானிய மக்களைக் கண்ணியம், சமத்துவம் மற்றும் சுயமரியாதையுடன் உயர்த்துவதற்காக அளிக்கப்பட்ட காலத்தால் அழியாத வாக்குறுதி அது.
அண்ணாவின் தொலைநோக்குப் பார்வையின் ஒளியில்தான் தமிழ்நாடு எப்போதும் செழித்தோங்கியது. இந்த மண்ணிற்கு அண்ணாவின் கட்சி தேவை. அண்ணாவின் ஆட்சி தேவை. நிர்வாகத்தில் கருணையும், நீதியில் அச்சமின்மையும், மக்கள் நலனில் சமரசமற்ற உறுதியும் கொண்ட உண்மையான திராவிடத்தின் ஆன்மா இந்த மண்ணிற்குத் தேவை.
ஒவ்வொரு தலைமுறையின் ஊடாகவும் அண்ணாவின் குரல் தொடர்ந்து எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது:
"மக்களுக்காக, மக்களோடு, என்றும் மக்களால்."
அண்ணாவின் லட்சியங்கள் என்றும் நிலைத்திருப்பவை. தமிழ் மக்களின் இதயங்களில் தமிழ் வாழும் வரை, அண்ணாவின் வழி தமிழகத்தை முன்னேக்கி வழிநடத்தும்." எனறு கூறியுள்ளார்.
காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், தமிழ்நாட்டிற்கு எது சிறந்தது - நீண்ட கால அனுபவம் கொண்ட பாரம்பரியக் கட்சியா அல்லது ஒரு புதிய சக்தியா?" என்று மக்கள் தொழில்நுட்பத்திடம் கேட்கும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், அதற்கான உண்மையான பதில் இதுதான்:
யார் ஒரு நிலையான ஆட்சியை வழங்குகிறார்கள், தொடர்ச்சியான வளர்ச்சியை மாநிலத்திற்கு உறுதி செய்கிறார்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றத்தை அளிக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே அது அமையும். இறுதியில், ஒரு கட்சியின் வயதோ அல்லது அதன் அடையாளமோ முக்கியமல்ல; அவர்களின் செயல்பாடும் , எதிர்காலத்திற்கான தொலைநோக்குப் பார்வையுமே உண்மையான வெற்றியைத் தீர்மானிக்கும்" என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.














Click it and Unblock the Notifications