"விஜய் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை.. சினிமா டயலாக் பேசுறாரு”.. சீமான் காட்டம்!
சென்னை: "விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை; இருந்திருந்தால் வெளிப்பட்டிருக்கும். திரைப்பட வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார் விஜய். இது நல்ல அணுகுமுறை அல்ல" என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
"விஜய் சென்றதால்தான் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஆனால், அவர் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. திரைப்படத்தின் வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார். கூட்டத்தில் கத்தியுடன் புகுந்தவர்கள் தாக்கினார்கள் என்றால், மருத்துவமனையில் இருக்கும் ஒருவருக்குக் கூட கத்திக் குத்து காயம் இல்லாதது எப்படி?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் சீமான்.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விஜய் மவுனமாக இருந்ததால், அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்தது. இந்நிலையில், தவெக தலைவர் விஜய் 3 நாட்களுக்குப் பிறகு கரூர் சம்பவம் தொடர்பாக வீடியோ வெளியிட்டார்.
அதில் பேசியுள்ள விஜய், "ஏறத்தாழ 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்துக்கு சென்றோம். அங்கெல்லாம் எதுவும் நடக்கவில்லை. ஆனால், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூரைச் சேர்ந்த மக்கள், அந்த உண்மைகளை எல்லாம் வெளியே சொல்லும் போது, எனக்கு கடவுளே நேரில் வந்து இறங்கி அந்த உண்மைகளை சொல்வதுபோலத் தோன்றியது.
'சிஎம் சார்' உங்களுக்கு பழி வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏதாவது இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள். நான் வீட்டில் இருப்பேன் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நண்பர்களே, தோழர்களே, நமது அரசியல் பயணம், இன்னும் வலிமையாகவும், இன்னும் தைரியத்தோடும் தொடரும்" எனப் பேசினார்.
விஜய் வெளியிட்ட வீடியோவில் அவர் பேசியுள்ள கருத்துகள் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில், "விஜய்யின் இதயத்தில் வலியோ, காயமோ இல்லை; இருந்திருந்தால் வெளிப்பட்டிருக்கும். திரைப்பட வசனம் போல வீடியோவில் பேசியுள்ளார் விஜய்." என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
விருதுநகரில் காமராஜர் நினைவு இல்லத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், "விஜய் பேசியது திரைப்பட வசனம் போல இருக்கிறது. இது நல்ல அணுகுமுறை அல்ல. சிஎம் சார் எனச் சொல்வதே சின்னப்பிள்ளை பேசுவது போல இருக்கிறது. விஜய் வீடியோவை பார்க்கும்போது அவரது இதயத்தில் வலியோ, காயமோ இல்லை. இருந்திருந்தால் அவரது மொழியில் அது வெளிப்பட்டு இருக்கும். உருக்கமாக பேசி விஜய் வீடியோ வெளியிட்டிருக்க வேண்டும்.
இந்த நிகழ்வைப் பொறுத்தவரை விஜய் அந்த இடத்துக்கு பரப்புரைக்குச் சென்றதால் தான் நிகழ்ந்தது. அவர் போகவில்லை என்றால் இது நடந்திருக்காது. அப்படி என்றால் காரணம் யார்? மற்ற இடங்களில் எல்லாம் நடக்கவில்லை என்று சொல்கிறீர்கள் என்றால், அங்கும் நடந்திருக்க வேண்டும் என்கிறீர்களா? எல்லா கூட்டத்திலும் மயங்கி விழுந்தார்கள், இங்கு கூட்ட நெரிசல் அதிகம் என்பதால் மிதித்து பலர் பலியாகினர்.
கூட்டத்துக்குள் ஆள் புகுந்தார்கள், கத்தியால் குத்தினார்கள் என்கிறீர்கள். நான் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தேன். ஒருவருக்கு கூட கத்தியால் குத்திய காயம் இல்லை. மிதித்ததில் தான் பலருக்கும் காயம். விஜய்யிடமே தண்ணீர் கேட்டார்கள். அவர் தண்ணீர் பாட்டிலை தூக்கிப் போடுகிறார். ஒருவரின் தேவைக்கு போடுகிறார், ஆனால் சுற்றி இருக்கும் அனைவருக்கும் தாகம் தானே?
திரைக்கவர்ச்சி நாட்டை ஆள முயற்சிக்கிறது. திரை மயக்கம், திரை போதையில் உள்ளனர். விஜய்க்கு சுய சிந்தனை இருக்கிறது என்றால் எதற்கு அருகில் ஆள் இருக்க வேண்டும்? சிஎம் சார் என விஜய் கூறியது சிறுபிள்ளைத்தனம். இனிமேல் இதுபோன்று நடக்காது என்று எந்தக் கட்சியும் தெரிவிக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications