சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை! "இடியை" இறக்கிய ஆட்சியர்கள்
சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் நாளை (அக்டோபர் 17) பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறையா என மாணவர்களும் பெற்றோரும் எதிர்பார்த்து வந்த நிலையில் ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
நாளை காற்றழுத்தம் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா என மாணவர்கள் டிவியை பார்த்து பார்த்து சோர்ந்து போய்விட்டனர். பெற்றோர்களும் பள்ளிகளில் இருந்து ஏதாவது மெசேஜ் வந்ததா என பார்த்து கண்களே பூத்துவிட்டன.

வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 290 கி.மீ. தூரத்தில் உள்ளது. இது நாளை காலை தென் ஆந்திரா இடையே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த காற்றழுத்தமானது ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாகவும் புயலாகவும் மாறாது. அதே வேளையில் இது வலுவிழக்கவும் இல்லை. எனவே கரையை கடக்கும்போது சென்னைக்கு நிச்சயம் மழை இருக்கும். இன்றே ரெட் அலர்ட் என கூறி அந்தளவுக்கு மழை பெய்யவில்லை. ஆயினும் பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுவிட்டது.
சென்னையில் நாளையும் ஆங்காங்கே கனமழை பெய்யும் என தெரிவித்துள்ள நிலையில் நாளை பள்ளிகள் இயங்குமா இல்லை விடுமுறையா என்ற கேள்வி எழுந்தது. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை விடுவது குறித்து, நாளை காலை முடிவு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டது. மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் நாளை வழக்கம் போல் செயல்படும் என ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்களின் தலையில் இடியை இறக்கியது போல் இருக்கிறது.












Click it and Unblock the Notifications