ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது.. நமக்கும் தெரியாது.. வடிவேல் செம கிண்டல்!
ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது, இது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாது என்று நடிகர் வடிவேல் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை: ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது, இது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாது என்று நடிகர் வடிவேல் தனது பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.
Recommended Video
நேற்று நடிகர் ரஜினிகாந்த் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் உடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், தன்னுடைய அரசியல் நிலைபாட்டை அறிவித்தார்.
அதில் எனக்கு முதல்வர் ஆக விருப்பம் இல்லை. நான் கட்சிக்கு மட்டும் தலைவராக இருப்பேன். ஆட்சிக்கு வேறு ஒருவர்தான் தலைவராக இருப்பார். வேறு நல்ல நபர் ஒருவரை நாம் முதல்வராக தேர்வு செய்ய வேண்டும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.

என்ன சொன்னார்
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பேட்டி அவரின் ரசிகர்களுக்கு பெரிய அளவில் அதிர்ச்சி அளித்தது. இந்த நிலையில் நடிகர் வடிவேல் நடிகர் ரஜினியின் அரசியல் திட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நேற்று வடிவேல் தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பாரா என்று அவருக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது.

இல்லை
இது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாது. மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் அதை வரவேற்கவேண்டும். கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற அவரின் முடிவை வரவேற்கிறேன். அவர் எடுத்த முடிவு சரியானதுதான். என் திட்டப்படி 2021ல் நான்தான் முதல்வர், கண்டிப்பாக இது நடக்கும் என்று நடிகர் வடிவேல் கிண்டலாக தனது பேட்டியை முடித்தார்.

தீவிரம்
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் திமுகவிற்காக தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்தவர்தான் நடிகர் வடிவேல். அந்த தேர்தலில் அதிமுக அமோகமாக வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. ஆனாலும் வடிவேல் பிரச்சாரம் மக்களை பெரிய அளவில் கவர்ந்தது. அதன்பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த வடிவேல், தீவிர அரசியலுக்கு வர வாய்ப்புள்ளது என்றார்கள்.

மீண்டும் வருகிறார்
ஆனால் தீவிர அரசியலில் ஈடுபடாமல், விலகி இருந்தார் வடிவேல். தற்போது மீண்டும் அவர் ஒரு சில படங்களில் நடிக்க தொடங்கி உள்ளார். தற்போது மீண்டும் நீண்ட நாட்களுக்கு பிறகு அரசியல் தொடர்பான முக்கியமான கருத்து ஒன்றை நடிகர் வடிவேல் கூறியுள்ளார். இதனால் அடுத்த வருட சட்டசபை தேர்தலில் மீண்டும் வடிவேல் பிரச்சாரம் செய்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications