வடசென்னை மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கை.. இனி நோ டிராபிக் ஜாம்! அசத்தும் தமிழக அரசு
சென்னை: வடசென்னை டிராபிக் ஜாமுக்கு பெயர் பெற்ற பகுதி. நெரிசலான குடியிருப்புகள், குடியிருப்புகளை ஒட்டி போகும் சாலைகள் என வட சென்னை என்று சொன்னாலே நெரிசல் மிகுந்த பகுதிகள்தான் நினைவுக்கு வரும். இப்படி இருக்கையில் இந்த நெரிசலை குறைக்க புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்திருக்கிறார்.
கொருக்குப்பேட்டை மணலி சாலையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் ரூ.96.04 கோடி செலவில் புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த பாலத்தைதான் நேற்று திறந்து வைத்தார்.

போக்குவரத்து நெரிசல் மிகுந்த கொருக்குப்பேட்டை, மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் உள்ள இரயில்வே 2பி மற்றும் 2ஏ சந்திக்கடவுகளில் தொடர் இடைவெளிகளில் இரயில் போக்குவரத்துக்கு ஏதுவாக சுமார் 42 ஆயிரம் வாகனங்களின் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால் இவ்விரு சந்திக்கடவுகளையும் கனரக வாகனங்களும் பொதுமக்களும் கடப்பதற்கு காலதாமதமாகிறது.
இதன் காரணமாக இப்பகுதி மக்களின் 40 ஆண்டு கால கோரிக்கையினை நிறைவேற்றி, பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையிலும், காலநேரம் மற்றும் எரிபொருள் சேமிப்பை கருத்திற்கொண்டும் மேற்படி சந்திக்கடவுகளுக்கு மாற்றாக மணலி சாலை மற்றும் எண்ணூர் நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டது.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், கொருக்குப்பேட்டையில் உள்ள மணலி சாலையில் 2பி இரயில்வே சந்திக்கடவில் புதிய மேம்பாலம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின்படி, தண்டையார்பேட்டை மண்டலம், கொருக்குப்பேட்டை, மணலி சாலையில் இரயில்வே 2பி சந்திக்கடவில் உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியின் கீழ் 96.04 கோடி ரூபாய் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்றையதினம் மக்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்து, வாகனத்தில் பயணம் செய்தார்.
இம்மேம்பாலத்தின் நீளம் 840 மீட்டர் (இரயில்வே பகுதி நீளம் 72 மீட்டர் உட்பட), அகலம் 8.40 மீட்டர் மற்றும் மேம்பாலத்தின் இரு மருங்கிலும் சேவை சாலையின் (Service Road) அகலம் 5 மீட்டர் ஆகும். இப்பாலத்தினால் கொடுங்கையூர், கொருக்குப்பேட்டை, தண்டையார்பேட்டை, எழில் நகர். கண்ணதாசன் நகர் மற்றும் நேரு நகர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 இலட்சம் மக்கள் பயனடைவர் என இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications