காலம் மாறிடுச்சு.. ரியல் எஸ்டேட் துறையில் தென் சென்னையை முந்தும் வடசென்னை.. எதிர்பார்க்காத ட்விஸ்ட்
சென்னை: வடசென்னை ரியல் எஸ்டேட் துறையில் வேகமாக வளர்ந்து வருகிறது. 50 க்கும் மேற்பட்ட புதிய ரியல் எஸ்டேட் திட்டங்களுடன் வளர்ச்சியில் வடசென்னை ஏற்றம் கண்டுள்ளது.
ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் பலரும் வேகமான இந்த வளர்ச்சிக்கு சென்னை மெட்ரோவின் விரிவாக்கம் மற்றும் அந்த பகுதியில் நடந்து வரும் உள்கட்டமைப்பு திட்டங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள்தான் காரணம் என்று கூறுகின்றனர்.

விலை குறைவு: பொதுவாக பெரிய நகரங்களில் இடங்கள் மலிவு விலையில் நிலம் கிடைப்பது ரியல் எஸ்டேட் துறையை அதிகம் ஈர்க்கிறது. குறிப்பாக, நகரின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது வட சென்னையில் நிலத்தின் விலை குறைவாக இருப்பதால், ரியல் எஸ்டேட் திட்டங்கள் மேற்கொள்ள வசதியான இடமாக மாறி உள்ளது.
வட சென்னையில், மாதவரம், திருவொற்றியூர், பெரம்பூர், கொளத்தூர், புரசைவாக்கம், தண்டியார்பேட்டை, எண்ணூர், மணலி, ராயபுரம், சவுகார்பேட்டை மற்றும் மூலக்கடை போன்ற இடங்களில் ரியல் எஸ்டேட் துறை வேகமாக வளர்ந்து வருகிறது.
இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (CREDAI) பகிர்ந்துள்ள விவரங்களின்படி, இ-காமர்ஸ் பிரிவின் வளர்ச்சி ஒருவகையில் வடசென்னையின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ளது.
இங்கே மாதவரம்-ரெட் ஹில்ஸ் பெல்ட் முதல் பெரியபாளையம் மற்றும் ஒரக்காடு கிளஸ்டர் வரையிலான இடங்கள் ரியல் எஸ்டேட் துறையில் மிக வேகமாக வளர்கின்றன. பெரியபாளையம் சாலை மற்றும் ரெட் ஹில்ஸ் ஆகியவை பெரிய கிடங்கு வசதிகளுடன், A கிரேடு கட்டுமானங்களுக்கு உகந்தவையாக மாறி உள்ளன. இந்த காரணிகள் அனைத்தும் ரியல் எஸ்டேட் டெவலப்பர்களை ஈர்க்கின்றன.
வளர்ச்சி திட்டம்: சென்னையில் தென்சென்னை தொடர்ந்து வளர்ந்து வந்தாலும் இன்னும் வடசென்னை பெரிதாக வளர்ச்சி அடையவில்லை. இந்த நிலையில்தான் வடசென்னையின் வளர்ச்சியை குறி வைத்து தமிழ்நாடு அரசு முக்கியமான "பிக் ப்ராஜெக்ட்" திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
அதன்படி வடசென்னை வளர்ச்சியை மையப்படுத்தி, அங்கே உள்ள குறைகளை போக்க, 1,000 கோடி ரூபாய் செலவில், 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' என்ற புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வடசென்னையை மொத்தமாக உருமாற்றம் விதமாக இந்த பணிகள் தொடங்க உள்ளன. அங்கே அடிப்படை வசதிகள் தொடங்கி அல்டிமேட் வசதிகள் வரை பலவற்றை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.
தென்சென்னை அளவிற்கு அல்லது தென்சென்னையை விட சிறப்பாக சென்னையை வளர்க்கும் முடிவில் இந்த 'வடசென்னை வளர்ச்சி திட்டம்' கொண்டு வரப்பட்டு உள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) சார்பாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
முக்கிய விஷயம் சேர்ப்பு: இதில் மக்கள் சொன்ன கருத்துக்களின் படி கால்பந்து, குத்துசண்டை மைதானம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கான திட்டங்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இங்கே உள்ளவர்கள் கால்பந்து, குத்துச்சண்டையில் அதிக ஆர்வம் காட்டுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை பெருநகர வளர்ச்சி குழும (சிஎம்டிஏ) அமைச்சர் சேகர் பாபு தலைமையில் இந்த பணிகள் நடக்க உள்ளன. இதன் ஒரு கட்டமாக வுமன் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மாணவர்கள் வடசென்னையின் பல்வேறு பகுதியில் உள்ள உள்கட்டமைப்பு இடைவெளிகளைக் கண்டறிய ஒரு கணக்கெடுப்பைத் தொடங்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications