ஹெல்மெட்டிற்கு காசு கேட்ட வடமாநில இளைஞர்.. கத்தியால் வெட்டிய கஞ்சா போதை இளைஞர்கள்.. ஆவடியில் பரபரப்பு
சென்னை: சென்னை ஆவடியில் சாலையோரம் ஹெல்மெட் விற்பனை செய்து வந்த வட மாநில தொழிலாளியை கஞ்சா போதையில் இருந்த இரண்டு இளைஞர்கள் பட்டா கத்தியால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த வடமாநில தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னையின் பல்வேறு இடங்களிலும் சாலையோரம் ஹெல்மெட் விற்பனை செய்யப்பட்டு வருவதை காண முடியும்.
பெரும்பாலும் வட மாநிலத்தவர்கள் ஹெல்மெட் விற்பனையில் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜ்குமார் சிங் என்ற வட மாநில இளைஞர் ஹெல்மெட் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

பட்டாக்கத்தியால் வெட்டிய இளைஞர்கள்
அப்போது அந்த வழியாக கஞ்சா போதையில் வந்த இரு இளைஞர்கள் ஹெல்மெட் விற்பனையில் ஈடுபட்டு வந்த வட மாநில இளைஞரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். ஹெல்மெட்டை வாங்குவது போல தலையில் மாட்டி பார்த்து விட்டு பணம் கொடுக்காமல் அங்கிருந்து இரண்டு இளைஞர்களும் செல்ல முயன்றுள்ளனர். உடனே ராஜ்குமார் சிங் இரண்டு பேரையும் பிடித்து நிறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த இரு இளைஞர்களும் எங்களிடமே பணம் கேட்கிறாயா என்று கேட்ட படி மறைத்து வைத்திருந்த பட்டா கத்தியை எடுத்து வட மாநில இளைஞரான ராஜ்குமார் சிங் தலையில் வெட்டியுள்ளனர்.

உடனடியாக 2 பேரும் கைது
இதில் தலையில் பலத்த வெட்டுக்காயம் அடைந்த ராஜ்குமார் சிங் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் பற்றிய தகவல் அறிந்த போலீசார் உடனடியாக அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வட மாநில நபரை பட்டாகத்தியால் தாக்கிய நபர்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்தனர். அதில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ஆவடியை சேர்ந்த சதிஷ் மற்றும் ராக்கேஷ் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

போலீசார் விசாரணை
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆவடியில் பட்டப் பகலில் கஞ்சா போதையில் வட மாநில தொழிலாளி மீது இரு இளைஞர்கள் நடத்திய தாக்குதல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக ஓடும் ரயிலில் வட மாநில இளைஞர்க்ளை ஒருவர் கடுமையாக தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தேடப்படும் குற்றவாளியாக..
அந்த வீடியோவில், வட மாநில இளைஞர்களை பார்த்து இந்திகாரங்க நீங்க எதுக்கு வர்றீங்க? நாங்கள் தான் இங்கு இருக்கிறோமே? நாங்களே எல்லா வேலையையும் பார்த்து கொள்கிறோம் என ரயிலில் கூட்ட நெரிசலில் நின்று இருக்கும் நபர்களை தமிழ் பேசும் நபர் ஒருவர் கடுமையாக தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், வடமாநில இளைஞர்களை தாக்கிய நபரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததோடு, தாக்குதல் நடத்திய நபர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications