வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படவில்லை.. வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை: டிஜிபி சைலேந்திர பாபு
வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பினால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் வட மாநிலத்தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்றும் டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார். வதந்தி பரப்பியவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வீடியோக்கள் வெளியாகி வருகின்றனர். தமிழ்நாட்டில் இருந்து கூட்டம் கூட்டமாக வட மாநில தொழிலாளர்கள் வெளியேறி வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படுவது வதந்தி என்றும், அதை நம்பவேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். இதுதொடர்பான வீடியோக்களும் போலி என்று தமிழக போலீஸ் கூறியிருக்கிறது. இதனிடையே வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்தியில் அறிவிப்புகளை தமிழக காவல்துறை தனது இணைய தளத்தில் வெளியிட்டு உள்ளது.
இந்த நிலையில், வதந்தி பரப்புவோரை பிடிக்க டிஜிபி உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் யார் வதந்தி பரப்புகிறார்கள் என போலீசார் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து தற்போது வதந்தி பரப்பியதாக 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. திருப்பூரில் 2 பேர் மற்றும் தூத்துக்குடியில் ஒருவர் என மொத்தம் 3 பேர் மீது தமிழக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள் மூவரும் தற்போது தலைமறைவாகி உள்ளதாகவும், அவர்களை பிடிக்கும் பணியானது தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், வடமாநில தொழிலாளர்கள் தொடர்பாக அவதூறு பரப்புவோரின் பட்டியல் தயார்செய்யப்பட்டு வருகிறது என்றும், அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநில தொழிலாளர்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாநகர காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாக வடமாநில தொழிலாளர்களை சந்தித்த பிறகு திருப்பூர் காவல் ஆணையர் பிரவீன்குமார் அபினபு கூறியுள்ளார். திருப்பூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனி உதவி மையம் திறக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டிஜிபி சைலேந்திரபாபு, வட மாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புபவர்கள் கைது செய்யப்பட்டு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று கூறினார். வட மாநிலத் தொழிலாளர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் அவர்கள் அச்சத்துடன் சொந்த ஊருக்கு செல்லவில்லை என்றும் கூறினார்.
7ஆம் தேதி ஹோலி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகையை கொண்டாட வட மாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்கின்றனர் என்றும் கூறினார். வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு கூறினார்.












Click it and Unblock the Notifications