சட்ட சபையில் பேச விட்டிருந்தால்.. ஆளும் கட்சியை கிழி கிழி என கிழித்து இருப்பேன்.. எடப்பாடி ஆவேசம்
சென்னை: எந்த காலக்கட்டத்திலும் யாருக்கும் அஞ்சியதும் கிடையாது, ஓடி ஒளிந்ததும் கிடையாது. மேடையில் அமைச்சர் பேசுகிறார், எதிர்க்கட்சி தலைவர் உள்ளே இருந்தால் கிழி கிழியென்று கிழித்துவிடுவோம் என்று.. பேப்பரை வேனும் என்றால் கிழிக்கலாம். சட்டப்பேரவையில் என்னை பேச அனுமதித்து இருந்தால், நான் கிழி கிழியென்று கிழித்திருப்பேன் என உண்ணாவிரத போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்ததில் 60 பேர் பலியாகியுள்ளனர். 50 பேர் முழுவதும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எனினும் இன்னும் 40க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி சம்பவம் பற்றி சட்டசபையில் விவாதிக்க கோரி அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். நேற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கள்ளக்குறிச்சி பற்றி விவாதிக்க கோரி கேள்வி நேரத்தில் போது அமளி செய்து வந்தனர். இதனால் சட்டசபை மாண்பை குலைத்ததாக கூறி அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரையும் இந்த கூட்டத்தொடர் முடியும் வரை சபையில் பங்கேற்க கூடாது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.
இந்த நிலையில் தான் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி சம்பவம் மற்றும் சட்டசபையில் இந்த கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க கூடாது என்ற அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக எம்எல்ஏக்கள் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அதிமுக உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு நன்றி. கள்ளக்குறிச்சி விஷ சாராய மரணத்திற்கு திமுக அரசே காரணம். மக்கள் பிரச்சினையை தான் பேச அனுமதி கேட்டோம். மக்கள் பிரச்சினையை பற்றி பேசுவதற்கு தான் சட்டசபை உள்ளது. ஆனால் அதிமுகவினரை வேண்டுமென்றே வெளியேற்றிவிட்டு முதல்வர் பதில் அளிக்கிறார்.
கள்ளக்குறிச்சி விவகாரம் பற்றி பேச கோரினால் எங்களை சபையில் இருந்து வெளியேற்றிவிட்டனர். எதிர்க்கட்சிகளை பேசவிட்டு பிரச்சினைகளை அணுகுவது தான் நல்ல அரசிற்கு அழகு. ஆனால் எங்களை வெளியேற்றிவிட்டு அதற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் 15 நிமிடம் பேசுகிறார். அச்சம் என்பது எங்களது அகராதியிலேயே கிடையாது. மக்களுக்கு சேவை செய்வதற்காகவே தொடங்கப்பட்ட கட்சி அதிமுக.
எந்த காலக்கட்டத்திலும் யாருக்கும் அஞ்சியதும் கிடையாது, ஓடி ஒளிந்ததும் கிடையாது. மேடையில் அமைச்சர் பேசுகிறார், எதிர்க்கட்சி தலைவர் உள்ளே இருந்தால் கிழி கிழியென்று கிழித்துவிடுவோம் என்று.. பேப்பரை வேனும் என்றால் கிழிக்கலாம். நான் எந்த அளவில் எப்படி பேசுவேன் என்பது எல்லாருக்கும் தெரியும். நான் பேசுவதை எல்லாம் சட்டப்பேரவையில் நேரலையில் ஒளிபரப்பு செய்து இருந்தால் நான் கிழி கிழியென்று கிழித்திருப்பேன் . ஆனால் அந்த வாய்ப்பை கொடுக்க மறுக்கிறார்கள்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிமுக அறவழியில் போராட்டம் செய்கிறது. திராவிட மாடல் ஆட்சியில் கள்ளக்குறிச்சியே கண்ணீரில் மிதக்கிறது. தமிழகத்தில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இன்றைக்கு 40க்கு 40 வெற்றி பெற்றுவிட்டோம் என்பதாலும், அனைத்திலும் அதிமுக தோல்வியடைந்துவிட்டதால் இப்படி பொறாமையில் வெளிநடப்பு செய்வதாக சொன்னார்.
இதே திமுக ஒரு கட்டத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் இருந்ததை மறந்துவிட வேண்டாம். இதே நிலை அன்று உங்களுக்கு இருந்தது. இப்போது அதை மறந்து இப்படி பேசக்கூடாது. சக்கரம் சுற்றிக்கொண்டு இருக்கிறது. ஆணவம் வேண்டாம். நாளை காட்சி மாறும். அதிகாரம் எங்கள் கைக்கும் வரும். அப்போது மக்கள் விரோத ஆட்சி நடத்தும் திமுக படுதோல்வி அடையும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications