விஜயகாந்த், கமல் அளவுக்கு சொதப்பல் இல்லை? விஜய் ரொம்ப தெளிவு..! அப்படியா?
சென்னை: ஜெயலலிதா பாணி அரசியலை நடிகர் விஜய் கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன் ஒரு வாதத்தை முன்வைத்து விஜய்யின் மாநாட்டுப் பேச்சை எடைபோட்டு அலசி ஆராய்ந்துள்ளார்.
விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் நடந்த தவெக மாநாட்டில் பகிரங்கமாகவே, ஆட்சியிலும் அதிகாரத்திலும் கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்கு தருவோம் என்று விஜய் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், திராவிடத் தலைவர் பெரியாரையும் காமராஜரையும் அரசியல் வழிகாட்டியாக ஏற்போம் என்றும் அறிவித்தார். அவர் பேசிய சமூக நீதி, பெண் உரிமை, நீட் எதிர்ப்பு எனப் பல கொள்கைகள் முன்பே திமுக பேசியதுதான். பாஜக எதிர்ப்பு என மறைமுகமாகச் சொல்கிறார் விஜய்.

ஆனால், நேரடியாகவே பாஜகவை எதிர்த்து வருகிறது. ஒரு பக்கம் பாஜக மதவாத சக்தி என்று விமர்சித்த விஜய், மறுபக்கம் பாஜக பாசிசம் என்றால் நீங்கள் என்ன பாயாசமா? என்று திமுகவையும் விமர்சிக்கிறார். ஆக, விஜய் அரசியல் பற்றி பேசுகின்றவர்கள் பலர் அவர் குழப்பத்தில் இருக்கிறார் என்றே சொல்கிறார்கள்.
ஆனால், கிட்டத்தட்ட சுமார் 1.50 லட்சம் பேர் வந்துள்ளதாக இந்த மாநாட்டிற்கு வந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதை வைத்து அவர் ஆட்சி மாற்றம் ஏற்படுத்திவிடுவார் என்று சிலர் சொல்கிறார்கள். உண்மையில் விஜய்யினால் அந்த மாற்றத்தைத் தர முடியுமா? அரசியல் விமர்சகர் ஆழி செந்தில்நாதன் சில விளக்கங்களை முன்வைத்துள்ளார்.
அவர், "விஜய் அரசியல் எதிரி என்றும் கொள்கை ரீதியாக ஒரு எதிரி என்றும் இரண்டு விசயங்களை முன்வைக்கிறார். அரசியல் எதிரி வேறு சித்தாந்தம் எதிரி வேறு என்பது சரியான பார்வை இல்லை. அதை அப்படிப் பிரித்துப் பார்க்க முடியாது. இரண்டும் வேறு வேறு அல்ல. ஒன்றுதான். 'திராவிட மாடல்' என சொல்பவர்கள்தான் அரசியல் எதிரி என்று சொன்ன விஜய், பாஜகவை வெளிப்படையாக எதிரி எனச் சொல்லவில்லை.
பெரியார், பிறப்புக்கும் எல்லா உயிருக்கும், சமூகநீதி, பெண்ணுரிமை என்ற அடிப்படையில் ஒரு அரசியல் கட்சி வந்தால் அதை வரவேற்கவேண்டும். அதில் தவறு இல்லை. ஜனநாயகத்தில் எத்தனைக் கட்சிகள் வந்தாலும் வரவேற்கலாம். ஆனால், ஜனநாயகம், சமூகநீதி ஆகியவற்றின் மீதே நம்பிக்கை இல்லாத ஒரு கட்சியைத்தான் பொதுவாக எதிர்க்கவேண்டி உள்ளது. ஆனால், விஜய் தனது கொள்கையாக புதியதாக ஒன்றுமே சொல்லிவிடவில்லை. திமுக, மதிமுக, பாமக, நாதக, விசிக ஆகிய கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக என்ன சொன்னதோ அதையேதான் விஜய் சொல்லி இருக்கிறார். 99% பழைய கொள்கைகள் இருக்கின்றன. விஜய் திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒன்றுதான் என்பதை நான் வரவேற்கிறேன்.
திமுக கொள்கையை அதிமுக, மதிமுக பேசுவது என்பது வேறு. இந்தக் கட்சிகள் திமுகவிலிருந்து பிரிந்து போன கட்சிகள். ஆனால், விஜய் அப்படி அல்ல. அவர் தனியாக எந்த அரசியல் கட்சியிலும் இல்லாமல் புதியதாக வந்திருக்கிறார். அவர் ஒரு புதிய விசயத்தை முன்வைக்க வேண்டும். வெறுமனே பெண்களுக்குச் செய்வோம், மருத்துவமனையைக் கட்டுவோம் என்று பேசக் கூடாது. இவை திட்டங்கள். அதை வைத்து மக்கள் ஓட்டுப் போடமாட்டார்கள். விஜய் பேச்சியில் புதியதாக எதையும் முன்வைத்ததாக எனக்குத் தெரியவில்லை.
அவர் மேடையே ஜனநாயக ரீதியாக இல்லை. விஜய் போட்ட மேடை ஜெயலலிதா, கமல்ஹாசன் கட்சி சார்பாகப் போடப்படும் மேடை சாயலில்தான் இருந்தது. மொத்தமே நான்கு இருக்கைகள்தான் போட்டிருந்தார்கள். கட்சி நிர்வாகிகள் என்பவர்கள் வேறு. கட்சித் தலைவர்கள் என்பது வேறு. சினிமாவில் வேண்டுமானால் ஒரே கதாநாயகன் இருக்கலாம். நிஜத்தில் பல தலைவர்கள் கட்சிக்கு வேண்டும். பெரியாராக இருந்தாலும் அண்ணாதுரையாகத் தனியாக மட்டுமே இல்லை. அவர்களுடன் பல தலைவர்கள் இருந்தனர். பாஜககூட அப்படித்தான். அதில் பல தலைவர்கள் இருந்தார்கள்.

விஜய் மேடையில் அதற்கான அறிகுறியே தெரியவில்லை. மக்கள் மத்தியில் வேலை பார்த்து உருவெடுப்பவர்கள்தான் தலைவர்கள். கட்சி அறிவிப்பவர் எல்லாம் தலைவராகிவிட முடியாது. அவர்கள் நிர்வாகிகள்தான். ரஜினி கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே இதையேதான் செய்தார். இரண்டு பேரைக் காட்டி கட்சி தொடங்க இருப்பதாகச் சொன்னார். இந்த வரிசையில் விஜயகாந்த் வித்தியாசமாக இருந்தார். நிஜமாக அவர் சில தலைவர்களை தன் பக்கம் வைத்திருந்தார்.
அரசியல் களத்தில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் வந்தபோது நான் இந்த மூன்று பேரையும் விமர்சித்திருக்கிறேன். நல்ல விசயங்களைச் சுட்டிக் காட்டி இருக்கிறேன். இவர்களைவிட விஜய் கொஞ்சம் தெளிவாக இருப்பதைப் போல தோன்றுகிறது. ஆனால், இந்த மூன்று பேர் எப்படிச் செயல்பட்டார்களோ அதே பாணியில்தான் விஜய்யின் செயல்பாடு இருக்கிறது. அதில் பெரிய மாற்றம் இல்லை.
தேசிய முற்போக்கு திராவிட கழகம் எனப் பெயர் வைப்பதிலேயே விஜயகாந்த் சொதப்பினார். எந்தக்கொள்கையும் தெளிவாக அவரிடம் இல்லை. விஜய் தெளிவாகக் கட்சிக்குப் பெயர் வைத்திருக்கிறார். பெரியார்,காமராசர், அம்பேத்கர் என சொல்லும்போதே அது சமூகநீதி அரசியல் என்பது தெளிவாகத் தெரிகிறது. அஞ்சலை அம்மாள், வேலுநாச்சியார் எனும்போது பெண்ணிய அரசியலை உள்ளே வைக்கிறார்.
எம்.ஜி.ஆர் முகத்திற்காக யாரும் ஓட்டுப் போடவில்லை. அவர் திமுக என்ற கட்சியில் இருந்து பிரிந்துவந்து கட்சியை உருவாக்கினார். அண்ணாதுரையை அவர் கடைசி வரை முன்னிலைப்படுத்தினார். எம்.ஜி.ஆரின் செல்வாக்கு திமுகவுக்கு பயன்பட்டதைப் போல திமுக அவருக்குப் பயன்பட்டது. அதன் தொடர்ச்சிதான் ஜெயலலிதா. தனியாக அவர் கட்சி ஆரம்பித்து முதல்வராகவில்லை. அதை விஜய் உணரவேண்டும். அவர் முகத்திற்காக யாரும் ஓட்டுப் போடமாட்டார்கள்" என்கிறார்.












Click it and Unblock the Notifications