அடுத்த முதல்வர் மட்டுமில்லை... தமிழக தேர்தலில் விடை தெரியாத 2 கேள்வி! திணறும் தேர்தல் ஆணையம்
சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் வென்று யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பதை இன்னும் கணிக்க முடியாத நிலை உள்ளது. இதனால் அடுத்த முதல்வர் யார்? என்பது மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கிடையே தான் தமிழகத்தில் மொத்தம் எவ்வளவு பேர் ஓட்டுப்போட்டனர்? தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது எவ்வளவு பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது? என்பது பற்றி இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட டேட்டாக்கள் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி முடிவடைந்தது. யார் ஆட்சியை பிடிப்பார்? அடுத்த முதல்வராக யார் வருவார்? என்ற ஆர்வம் மக்கள் மத்தியில் உள்ளது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என்றால் எளிதாக யார் வெல்வார்கள்? என்பதை பலரும் கணித்து விடுவார்கள். ஆனால் இங்கே விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் உள்ளது. இந்த கட்சியின் வேட்பாளர்களும் கணிசமான அளவுக்கு வாக்குகளை வாங்கலாம் என்பதால் வெல்வது யார்? முதல்வர் யார்? என்பதை கணிக்க முடியாமல் பல அரசியல் நோக்கர்களும் திணறி வருகின்றனர்.

இதற்கிடையே தான் நேற்று முன்தினம் எக்ஸிட் போல் முடிவுகள் வந்தன. பொதுவாக எக்ஸிட் போல் முடிவுகள் யார் ஆட்சியை பிடிப்பார்கள்? என்பதை உறுதி செய்து விடும். ஆனால் இந்த முறை 7 எக்ஸிட் போல்கள் திமுக கூட்டணி ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரிவித்துள்ளது. 3 எக்ஸிட் போல்கள் அதிமுக கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் என்று கூறியுள்ளது. ஆக்சிஸ் மை இந்தியா எக்ஸிட் போலில் விஜய்யின் தவெக 98 முதல் 120 தொகுதிகளில் வெல்லலாம் என்றும் கூறியுள்ளது. இதனால் எக்ஸிட் போல் முடிவும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதோடு, அடுத்து யாருடைய ஆட்சி? முதல்வர் யார்? என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
பைனல் வாக்கு சதவீதம் எவ்வளவு?
இதற்கிடையே தான் இன்னும் பல குழப்பங்கள் உள்ளன. தமிழகத்தில் தேர்தல் முடிந்து 7 நாட்கள் ஆகியும் கூட இன்னும் தேர்தல் ஆணையம் இறுதி வாக்காளர் சதவீதத்தை (Final voter turnout) வெளியிடவில்லை. தமிழகத்தில் சுமார் 85.13% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறினாலும் கூட துல்லியமான சதவீதத்தை இன்னும் தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.
இதனை திமுக, அதிமுக உள்ளிட்ட பல கட்சிகள் கேட்டு வருகின்றன. ஆனால் தேர்தல் ஆணையமோ இன்னும் தபால் வாக்குகள் (Postal ballots) சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதனால் தேர்தல் முடிவுகள் வரும்போதுதான் துல்லியமான வாக்கு சதவீதம் தெரியவரும் என்று பதிலளித்துள்ளது.
பறிமுதல் பணத்தில் குழப்பம்
இப்படி ஓட்டு சதவீதம் தான் குழப்பம் என்று பார்த்தால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம், பொருட்களின் மதிப்பீட்டிலும் பெரிய முரண்பாடு உள்ளது. ஏப்ரல் 22ம் தேதி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அளித்த பேட்டியில் தமிழகத்தில் பணம், நகை, மதுபானம் என்று மொத்தமாக ரூ.1,263 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யபப்ட்டன. இதில் பணம் மட்டும் ரூ.543 கோடியாகும் என்றார்.
ஆனால் ஏப்ரல் 21ம் தேதி அவரது அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் ரொக்கப் பணம் மட்டும் ரூ.169.85 கோடி என கூறியிருந்தார். அதேபோல் டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையம், தமிழகத்தில் 100.19 கோடி ரூபாய் மட்டுமே ரொக்கமாகப் பறிமுதல் செய்யப்பட்டதாக வேறொரு தகவலை வெளியிட்டது. இப்படி பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப்பணம் விஷயத்தில் 3 வெவ்வேறு டேட்டாக்கள் தரப்பட்டு இருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
புலம்பிய வருமான வரித்துறை
தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும்போது ரூ.10 லட்சத்துக்கும் மேலாக பணம் பறிமுதல் செய்யப்பட்டால் அது வருமான வரித்துறை வசம் செல்லும். இதனால் வருமான வரித்துறையிடம் பேசியபோது, ''கடந்த தேர்தல்களை விட இந்த முறை அதிகப் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2021 சட்டசபை தேர்தலில் ரூ.100 கோடி ரொக்கம், 2024 நாடாளுமன்ற தேர்தலில் ரூ.140 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த முறை தங்கம் + பணம் என்று மொத்தம் ரூ.210 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதேவேளையில் கடந்த முறையை போல் இல்லாமல் இந்த முறை தமிழக காவல்துறை போதிய தகவல்களை வருமான வரித்துறையுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. ரயில்வே போலீஸ், ஜிஎஸ்டி அதிகாரிகள், மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் மட்டுமே மட்டுமே நல்ல ஒத்துழைப்பு வழங்கின'' என புலம்பி உள்ளனர்.
குழப்பத்துக்கு விடை எப்போது?
ஒவ்வொரு தேர்தலும் அமைதியாகவும், நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடன் நடக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு தேர்தல் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். அதற்கு தேர்தல் பணியில் ஈடுபடும் அனைத்து அதிகாரிகளும் ஒரே மாதிரியான தரவுகளை வழங்க வேண்டும். அப்படி பார்த்தால் தற்போது நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் பல முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
இந்த முரண்பாடுகளை களைய வேண்டிய பொறுப்பு இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிற்கும் உள்ளது. அவர்கள் இந்த குழப்பங்களுக்கு விடையளிப்பார்களா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது. நம்புவோம் கட்டாயமாக பதிலளிப்பார்கள் என்று. ஏனென்றால் நம்பிக்கை அதுதானே எல்லாம்.












Click it and Unblock the Notifications