விஜய் கொடியில் பெரியார் இல்லை.. அண்ணா ஓகேதான்: அர்ஜுன் சம்பத் ஹேப்பி
சென்னை: நடிகர் விஜய்யை மிகக்கடுமையாக இதுவரை எதிர்த்துப் பேசி வந்த அர்ஜுன் சம்பத், திடீரென்று அவரது அரசியல் பிரவேசத்தை வரவேற்றுப் பேசியுள்ளார்.
நடிகராக மட்டுமே இருந்து வந்த நடிகர் விஜய்யை அரசியல் ரீதியாக எதிர்த்தவர் அர்ஜுன் சம்பத், அவர் கட்சி ஆரம்பித்தவுடன் ஆதரவு தெரிவித்து வருகிறார். ஒரு காலத்தில் நடிகர் விஜய்யை அவரது மத அடையாளத்துடன் தொடர்புப்படுத்தி ஜோசப் விஜய் என்று விமர்சித்தவர் அர்ஜுன் சம்பத். இப்போது மனமாற்றம் அடைந்துள்ளார்.

விஜய் கட்சியின் கொடியைப் புகழ்ந்து பேசுகிறார். அவரது கொள்கை பாடலை வரவேற்றுப் பேசுகிறார். இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்? விஜய் பாஜக பக்கம் வருவார் என எதிர்பார்க்கிறார்களா? திமுக ஆட்சியை வீழ்ந்த வேண்டும் என்பதற்காக தோழமை பாராட்டுகிறாரா? இப்படிப் பல கேள்விகள் குறித்து அர்ஜுன் சம்பத் ஒரு பேட்டியில் விளக்க அளித்துள்ளார். விஜய் ஆதரவு நிலைப்பாடு பற்றி அவர் பேசுகையில், "விஜய் கட்சி தொடங்கி இருப்பதை நான் மனப்பூர்வமாக வரவேற்கிறேன். அவர் கொடி மிக அழகாக இருக்கிறது. அதில் யானை, வாகை மலர், குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட நிறங்கள் எல்லாம் உள்ளன. இவை எல்லாம் பழந்தமிழர் சின்னங்கள். இதுவரை அவர் அரசியல் பேசியதில்லை; அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதும் இல்லை. ஒரு புதிய முயற்சியை எடுத்துள்ளார்.
அவர் 22 ஆம் தேதி கட்சி ஆரம்பித்துள்ளார். இரண்டும் இரண்டும் கூட்டினால் 4 வருகிறது. அவர் கார் எண்களைக் கூட்டினால் கூட்டுத்தொகை 4 வருகிறது. அவர் பெயரின் எழுத்துக்களை கூட்டினால் 4 வருகிறது. எல்லாம் பக்கா ஜாதக படி செய்துள்ளார். அவர் ஈவெரா கொள்கையின்படி இல்லை என்பது உறுதியாகிறது. நம் தமிழர் மரபு படி அம்மா, அப்பாவை வணங்குகிறார். ஆகவே, ஜோசப் விஜய்யை வரவேற்கிறேன்.
விஜய்யை நான் எதிர்த்த காலகட்டம் உண்டு. ஆதரித்த காலகட்டமும் உண்டு. முதன்முதலாக இலங்கைத் தமிழர்களுக்காக எங்கள் கட்சி சார்பில் உண்ணா விரதம் இருக்க அனுமதி பெற்று இருந்தோம். அப்போது விஜய் அவரது ரசிகர் மன்றம் சார்பாக உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டார். அந்த இடத்தில் எங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதால், அவருக்கு இடம் தரப்படவில்லை. விஜய் மன்றத்தினர் என்னை அணுகினார்கள். உடனே அந்த இடத்தை அவர்களுக்கு விட்டுக் கொடுத்தோம். அதேபோல அவரது அப்பா ஒரு ஆன்மிக நிகழ்ச்சியில் பங்குபெற வேண்டும் என்றார். அதற்கு நான் தான் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

எனவே எல்லா விசயத்திலும் நாங்கள் விஜய்யை எதிர்த்தது இல்லை. அவர் கட்சி பாடலை பார்த்தேன். அண்ணாவை வைத்துள்ளார். எம்.ஜி.ஆரை வைத்துள்ளார். பெரியாரை வைக்கவில்லை. அண்ணாதுரை 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்றார். அது திருமூலர் சொன்ன வார்த்தை. அதில் எங்களுக்கு உடன்பாடு உண்டு. அதை உணர்ந்துதான் அதிகாரப் பகிர்வுக்காக விஜய்யை வரவேற்கிறேன். அவரை வைத்து நாங்கள் திமுக ஆட்சியை ஒழிப்போம். எங்கள் பக்கம் வந்தால், விஜய் முதல்வராகலாம். திருமாவளவன் முதல்வராகலாம். ஜோசப் விஜய் என்பதால் எங்களுக்கு ஒரு உருத்தலும் இல்லை. நாங்கள் அவரை வரவேற்கிறோம்.
இந்து சார்ந்த பிரச்சினைகள் வரும்போது அப்போது நாங்கள் பார்த்துக்கொள்வோம். திமுகவைப் போல ஒரே குடும்பத்திலிருந்து முதல்வரை உருவாக்கும் கட்சி அல்ல பாஜக. எங்கள் உதவியால்தான் மாயாவதி முதல்வரானார். 5 மாநிலங்களில் பட்டியலின மக்களைத் துணை முதல்வராக வைத்துள்ளோம். வருங்காலங்களில் பாஜக சார்பாகப் பட்டியலினத்திலிருந்து பிரதமரே வருவார். ஆனால், திமுகவிலிருந்து துணை முதல்வராகக் கூட ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் வர முடியாது. எங்களின் இலக்கு 2026 பாஜக ஆட்சி தமிழ்நாட்டில் அமைய வேண்டும். அல்லது பாஜக கூட்டணியில் ஆட்சி அமைக்க வேண்டும். அதற்கு அதிமுக வந்தாலும் ஏற்றுக் கொள்வோம். எங்களின் எதிரி திமுக மட்டும்தான். அதிமுக வளர்வது பாஜகவுக்கு நல்லது. பாஜக வளர்ந்தால் அது அதிமுகவுக்கு நல்லது. ஆனால், திமுக வளர்ந்தால் இரண்டு கட்சிகளுக்கும் நல்லது அல்ல. அதை வீழ்ந்த வியூகம் அமைப்பதுதான் எங்கள் நோக்கம். அந்த வகையில் விஜய்யை ஏற்கிறோம்.
ஒரு காலத்தில் திமுகவே பாஜக கூட்டணியிலிருந்த கட்சிதான். மோடியா லேடியா என்று கேட்டவர் ஜெயலலிதா. பின்னர் அதே அதிமுக பாஜக கூட்டணிக்கு வரவில்லையா? அத்வானியை எக்ஸ்ட்ரா லகேஜ் என்று ஜெயலலிதா சொன்னார். எடப்பாடி பழனிசாமி பாஜகவுக்கு வரவில்லையா? ஓபிஎஸ் பாஜக கூட்டணிக்கு வரவில்லையா? டிடிவி தினகரன் வரவில்லையா? அதே போல விஜய் பாஜக கூட்டணிக்கு வரலாம். அப்படி வர மாட்டார் என்று எப்படிச் சொல்ல முடியும்? எங்கள் நோக்கம் பாஜக 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும். திமுக ஆட்சி வீழ்த்தப்பட வேண்டும்"என்று காரசாரமாகப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications