"தப்பு செஞ்சா.. பொண்டாட்டி காலில்கூட விழலாம் தப்பில்ல!" ஜாலி மோடில் உதயநிதி! கொண்டாடும் நெட்டிசன்கள்
கோவையில் அமைச்சர் உதயநிதியின் ஜாலி பேச்சு இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
சென்னை: அமைச்சர் உதயநிதி கோவையில் திருமண நிகழ்வில் பேசிய பேச்சு இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. தப்பு செய்தால் காலில் கூட விழலாம் என்று அமைச்சர் உதயநிதி சொன்னதை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.
திமுக இளைஞரணி செயலாளராகவும் விளையாட்டுத் துறை அமைச்சராகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். பொதுவாகவே இவரது பேச்சுக்கு இளைஞர்கள் மத்தியிலும் இணையத்திலும் நல்ல வரவேற்பு இருக்கும்.
இதற்கிடையே கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் பேசத் தொடங்கிய அமைச்சர் உதயநிதி, புதுமண தம்பதிகளுக்குப் பல அட்வைஸ்களை வழங்கினார். அவரது பேச்சு இணையத்தில் இப்போது டிரெண்டாகி வருகிறது.

அமைச்சர் உதயநிதி
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு கடந்த காலங்களிலும் பல முறை டிரெண்டாகியுள்ளது. குறிப்பாக 2021 தேர்தல் சமயத்தில் அவர் எய்ம்ஸ் விவகாரத்தை ஒற்றை செங்கல்லை எடுத்து வைத்து விமர்சித்தார். இது மிகப் பெரியளவில் வரவேற்பு கிடைத்தது. இளைஞர்களைக் கவரும் வகையில் உதயநிதி பேசுவது இணையத்திலும் டிரெண்டாகும். டான் உள்ளிட்ட படங்களுக்குக் குட்டி ரிவ்யூ, கார் மாறி எடப்பாடி ஏறிய விவகாரம் எனப் பல விஷயங்களில் உதயநிதியின் பேச்சு தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

அதிர்ந்த அரங்கம்
சமீபத்தில் அவர் ஈரோடு இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய பேச்சுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. இதற்கிடையே இப்போது கோவையில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி புதுமண தம்பதிகளுக்கு அட்வைஸ் செய்தார். சுயமரியாதை திருமணத்தின் வரலாற்றுடன் தனது பேச்சை சீரியஸாக தொடங்கிய அமைச்சர் உதயநிதி, அதன் பிறகு ஜாலி மோடிற்கு மாறினார். ஒரு கட்டத்தில் தவறு செய்தால் மனைவி காலில் கூட விழலாம் தப்பில்லை என்று அவர் சொல்ல அரங்கமே அதிர்ந்தது.

யாருக்கும் யாரும் அடிமை இல்லை
கோவையில் 70 ஜோடிகளுக்குச் சுயமரியாதைத் திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். மேலும், புது மணமக்களுடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார். அதன் பிறகு அங்கு மேடையில் பேசிய உதயநிதி ஸ்டாலின், "மணமக்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. இங்கு ஆண்கள் தாலி கட்டுவதாலோ.. பெண்கள் தாலியை வாங்கிக் கொள்வதாலோ.. யாருக்கும் யாரும் அடிமை இல்லை..

சுயமரியாதை திருமணம்
இங்கு நடந்துள்ளது சுயமரியாதை திருமணம்.. முன்பெல்லாம் இந்து சடங்குகளைப் பின்பற்றி நடத்தப்படும் திருமணத்தை மட்டுமே அங்கீகரித்தனர். சுயமரியாதை திருமணத்தை ஒப்புக்கொள்ளவில்லை. பெரியார் தான் இந்த விவகாரத்திற்காகத் தொடர்ந்து போராடினார். அதற்குச் சட்ட அங்கீகாரம் கொடுத்தவர் அண்ணா.. இந்த சுயமரியாதை திருமணத்தை அதன் பிறகு வந்த தலைவர்கள் நடத்தி வைத்து வருகிறார்கள். இதில் யாருக்கும் யாருமே அடிமையாக இருக்கக் கூடாது என்பதாலேயே சுயமரியாதை திருமணம் என்று பெயர் வைத்தார்கள்.

உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும்
திருமணமாகிவிட்டாலும் கூட நமது உரிமைகளைக் கேட்டுப் பெற வேண்டும்.. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால்.. அதிமுக பாஜக போல இருக்கக் கூடாது. ஒருவர் காலில் மற்றொருவர் விழக் கூடாது. இங்குத் திருமணத்திற்குப் பிறகு எனது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கச் சிலர் முற்பட்டார்கள். நான் அதைத் தடுத்தேன். பெற்றோர், குடும்பத்தில் இருக்கும் மூத்த உறவினர்கள் தவிர யாருடைய காலிலும் விழக் கூடாது. காலில் விழுந்தவர்களின் நிலை எல்லாம் இப்போது எப்படி இருக்கிறது என்று அனைவருக்கும் தெரியும் அதனால் தான் சொல்கிறேன்.

காலில்கூட விழலாம்
பொண்டாட்டி காலில்கூட விழலாம்.. தப்பில்லை.. தப்பு செய்திருந்தால் பொண்டாட்டி காலில்கூட விழலாம்.. இது இருவருக்கும் பொருந்தும். தவறு செய்திருந்தால் சமாதானம் செய்யக் காலில் கூட விழலாம். குடும்பத்தில் சண்டை வரத்தான் செய்யும். சண்டை இருக்காத திருமணமே இல்லை.. வெளியே சண்டையே போட்டுக் கொள்ள மாட்டோம் என்று சொன்னாலும் கூட.. சிறு சிறு சண்டைகள் வரத்தான் செய்யும். வேண்டியதை நாம் கேட்டுப் பெற வேண்டும். அதுதான் இந்த சுயமரியாதை திருமணம்" என்று ஜாலி மோடில் அட்வைஸ் செய்தார்.












Click it and Unblock the Notifications