வெட்கித் தலைகுனிகிறோம்.. ஆணவக்கொலை குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்றவேண்டும்.. சீமான் ஆவேசம்
கிருஷ்ணகிரி ஆணவப் படுகொலை கொலையாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை : கிருஷ்ணகிரியில் இளைஞரை ஆணவப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும் என்றும், ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே மகளை காதல் திருமணம் செய்த இளைஞரை பெண்ணின் தந்தை மற்றும் உறவினர்கள் நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவம் தமிழ்நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கும் சூழலில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை விடுத்துள்ளார்.

ஆணவக்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன் (28) மற்றும் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த சரண்யா (21) ஆகிய இருவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுகத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களது காதலுக்கு சரண்யா வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. எதிர்ப்பையும் மீறி இருவரும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், பைக்கில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த ஜெகனை, சரண்யாவின் தந்தை சங்கர் மற்றும் உறவினர்கள் 2 பேர் அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

வெட்கித் தலைகுனியச் செய்கிறது
இந்நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்து கொண்டதற்காக பெண்ணின் வீட்டாரால் ஜெகன் எனும் இளைஞர் நடுச்சாலையில் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட செய்தி பேரதிர்ச்சி தருகிறது. நாகரீகம் பெற்று குடிமைச்சமூகமாக வாழ்ந்து வரும் தற்காலத்திலும் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு என்ற பெயரில் அரங்கேற்றப்படும் ஆணவப்படுகொலைகள் ஒட்டுமொத்தச் சமூகத்தையும் வெட்கித் தலைகுனியச் செய்கிறது.

பச்சைப் படுகொலை
ஜெகனும், அவரது இணையரான சரண்யாவும் உறவினர்கள் என்றபோதிலும், காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்பட்ட இந்தப் பச்சைப் படுகொலையை ஒருநாளும் சகிக்க முடியாது. மனித மனங்கள் ஒன்றுபட்டு, மனமொத்து செய்கிற திருமணத்திற்கு சாதி, மதம், வர்க்கம் என எந்தவொரு காரணியைக் காட்டியும் எதிர்ப்புத் தெரிவிப்பதென்பது மனிதத்தன்மையே அற்ற கொடுஞ்செயலாகும். அதனை வன்மையாக எதிர்க்கிறேன்.

தனிச் சட்டம் வேண்டும்
ஆகவே, தம்பி ஜெகனைப் படுகொலை செய்த கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்து சிறைப்படுத்தி, அவர்களுக்குக் கடும் தண்டனை கிடைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், காதல் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்தப்படும் ஆணவக்கொலைக் குற்றங்களுக்கு எதிராகத் தனிச்சட்டமியற்ற வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications