"அடுத்து நம்ம தான்".. தொண்டர்களுக்கு சீமான் மெசேஜ்.. உற்சாகத்தில் நாம் தமிழர்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழர் என்று நான்கு முனை போட்டி நிலவியது. இதில் தவெக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக எதிர்க்கட்சியாகியுள்ளது. அதிமுக மூன்றாவது இடத்தையும், நாம் தமிழர் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளனர். நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி பெருமளவுக்கு சரிந்துள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியினர் வருத்தத்தில் உள்ளனர். இந்நிலையில் சீமான் கொடுத்துள்ள உற்சாக மெசேஜ் அவர்களுக்கு பெரிய ஆறுதலை வழங்கியுள்ளது.
சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தவெக ஆட்சி அமைப்பதற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியை பிடித்துள்ளது. மேலும் அதிமுகவில் வேலுமணி அணி மற்றும் அமமுக எம்எல்ஏ காமராஜ் ஆகியோர் தவெகவுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர். முதலமைச்சர் விஜய் பதவியேற்றதும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார்.

நாம் தமிழர் பின்னடைவு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலர் வைகோ, பாமக தலைவர் அன்புமணி, அதிமுக வேலுமணி, சி.வி. சண்முகம் அணி, திக தலைவர் வீரமணி ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் விஜய் சந்தித்து பேசினார். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. போட்டியிட்ட 234 தொகுகளிலும் நாம் தமிழர் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர்.
கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை நாம் தமிழர் கட்சிக்கு 8 சதவீதம் வாக்கு வங்கி இருந்தது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி 4 சதவீதமாக சரிந்துள்ளது. பல வருடங்களாக கடினமாக உழைத்து, தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் இந்த வாக்கு வங்கியை உருவாக்கியது. தற்போதைய தோல்வி நாம் தமிழர் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் மெசேஜ்
நாம் தமிழர் தொண்டர்களுக்கு சீமான் வெளியிட்டுள்ள ஆடியோவில், "கவலைப்பட வேண்டாம். இன்றைக்கு இல்லை என்றால் நாளைக்கு வெற்றி பெறுவோம். 5 வருடங்களில் களத்தை விட்டு வெளியேற கூடாது. 5 வருடங்கள் மக்களுடன் மக்களாக நிற்க வேண்டும். திரைக்கவர்ச்சியில் மக்கள் ஏமாந்துவிட்டார்கள். அவரை ஆட்சியில் அமர வைக்க நினைத்தனர். இப்போது அவரின் ஆட்சியை மக்கள் பார்த்துவிட்டார்கள். அடுத்து நமக்கு தான் வாய்ப்பு. தைரியமாக இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications