டிடிவி தினகரனும் ஸ்டாலினும் பலமுறை ரகசியமாக சந்தித்துள்ளனர் - ஓபிஎஸ்
Recommended Video
சென்னை : திமுகசெயல்தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரனும் பலமுறை சந்தித்துபேசியுள்ளனர் என்று துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிற்கும் பாஜகவிற்கு உடன்பாடு உள்ளது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. அதிமுகவை பாஜக ஆட்டி வைக்கிறது என்றெல்லாம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அதிமுகவை பார்த்து முன்வைத்த விமர்சனங்கள். இன்று அந்த விமர்சனங்களுக்கெல்லாம் பதில் விமர்சனத்தை முன் வைத்து வருகிறது அதிமுக தரப்பு.
டிடிவி. தினகரனை திமுக பின்னால் இருந்து இயக்குகிறது. இதன் காரணமாகவே 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கிலும் மேல்முறையீடு செய்யாமல் தேர்தலை சந்திக்கும் முடிவை எடுத்தனர். ஸ்டாலினுக்கு முதல்வர் பதவி, டிடிவி .தினகரனுக்கு துணை முதல்வர் பதவி என ரகசிய பேரம் நடந்துள்ளது என்றெல்லாம் அதிமுக முக்கிய தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது: திமுக தலைவர் ஸ்டாலினும், டிடிவி. தினகரனும் பலமுறை சந்தித்து பேசியுள்ளனர். இருவரும் சந்தித்தது பற்றி எங்களுக்கு தகவல் கிடைத்தது.
திருவாரூர்,திருப்பரங்குன்றம் உள்பட 20 தொகுதிக்கும் இடைத்தேர்தல் விரைவில் வர இருப்பதையொட்டி அதிமுக சார்பில் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அடிப்படை பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கியுள்ளனர். அதிமுகவிற்கு நிச்சயம் தோல்வி இல்லை. பிரிந்து சென்ற நிர்வாகிகள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என்று அழைப்புவிடுப்பது எங்களின் கடமை அழைப்பை ஏற்பதும் ஏற்காததும் அவர்களது விருப்பம்.
எம்ஜிஆர் வழியில் அதிமுக நிச்சயம் வெற்றியை பெறும்.
வடகிழக்குப் பருவமழையால் பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் விதமாக தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எங்குமே பாதிப்பு ஏற்படாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.