15 தொகுதிகளுக்கு லிஸ்ட் கொடுத்த ஓ.பன்னீர் செல்வம்.. அப்படியே ஷாக் ஆன பாஜக
சென்னை: பாஜக கூட்டணியில் உள்ள ஓபிஎஸ் அணி 15 தொகுதிகளுக்கான விருப்ப பட்டியலை கொடுத்துள்ள நிலையில் பாஜக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அணிக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுக்க பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில் 15 தொகுதிகளுக்கான விருப்பப்பட்டியலை அவர் பாஜக மேலிடத்தில் கொடுத்து அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை ஆனாலும் தமிழ்நாட்டில் அரசியல் களம் அனலடிக்கிறது. பலமுனை போட்டி உருவாகியுள்ளதால் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது. அதிமுக தனி அணியாக லோக்சபா தேர்தலில் களமிறங்குகிறது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் முடிந்து ஒப்பந்தங்கள் அடுத்தடுத்து கையெழுத்தாகி வருகின்றன.

பாஜக கூட்டணியில்தான் நாங்கள் இருக்கிறோம் என்று பல மாதங்களாகவே கூறி வருகிறார் ஓ.பன்னீர் செல்வம். அவர் சொன்னது பலித்து விட்டது. பாஜக கூட்டணியில் ஒரு வழியாக இணைந்து போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தேர்தல் கூட்டணி தொடர்பாக பாஜக நிர்வாகிகள், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரிடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர்கள் எல்.முருகன், கிஷன் ரெட்டி, வி.கே.சிங் பங்கேற்றனர். ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொடரும்.
பாஜக பொறுப்பாளர்கள் எங்களுடைய கோரிக்கைகளை தெளிவாகக் கேட்டுள்ளனர். தொகுதிகள் குறித்து மற்ற கூட்டணி கட்சிகளுடன் கலந்து பேசி தெரிவிப்பதாக கூறி உள்ளனர். மற்ற கட்சிகளுடன் கேட்டு அனைவரும் ஏற்கும் வகையில் முடிவு எட்டப்படும் என்றார்.
இதனிடையே ஓபிஎஸ் அணிக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் கொடுக்க பாஜக திட்டமிட்டு இருந்த நிலையில் 15 தொகுதிகளுக்கான விருப்பப்பட்டியலை அவர் பாஜக மேலிடத்தில் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், நாகை, தஞ்சாவூர், ஆரணி, திருச்சி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், மதுரை, கோவை, நாமக்கல், சேலம் உள்ளிட்ட தொகுதிகள் அடங்கிய பட்டியலை கொடுத்துள்ளது ஓபிஎஸ் தரப்பு. இதனைப் பார்த்து பாஜக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அதே நேரத்தில் ஓபிஎஸ் அணிக்கு 15 தொகுதிகள் என்பது அதிகம் என்றும் அது நிறைவேறாத ஆசை என்றும் அதிகபட்சமாக அவருக்கு இரண்டு அல்லது மூன்று தொகுதிகள் தான் கிடைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஓபிஎஸ் அணிக்கு தேனி மற்றும் வட சென்னை தொகுதி ஒதுக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன. தனக்கு கிடைக்கும் இரண்டு தொகுதிகளில் அவர் தனது இரண்டு மகன்களையும் போட்டியிட வைப்பார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.












Click it and Unblock the Notifications