சசிகலா மீது எந்த வருத்தமும் இல்லை.. அவரை கட்சியில் ஏற்பது குறித்து பரிசீலனை .. சொல்வது ஓ.பி.எஸ்!
சென்னை:. அதிமுகவின் அமைப்பை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை ஏற்றுக்கொள்வதை பரிசீலிக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.
ஜனநாயக முறையில் அதிமுக இயங்குகிறது. தனிப்பட்டவருக்காகவோ, குடும்பத்திற்காகவோ இயங்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
சசிகலா மீது முதலில் இருந்தே எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.

அரசியலுக்கு முழுக்கு போட்ட சசிகலா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் விடுதலையானபோது அவர் அதிமுகவை கைப்பற்றுவார் என்று யூகங்கள் எழுந்தன. பெங்களுருவில் இருந்து சென்னைக்கு அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் வந்தபோது இதைத்தான் பறைசாற்றினார். ஆனால் சென்னை வந்தபோது தொடர்ந்து மவுனமாக இருந்த சசிகலா யூகங்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் கடைசியில் அரசியலுக்கு முழுக்கே போட்டு விட்டார்.

ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
சசிகலாவின் இந்த முடிவு அவரது ஆதரவாளர்கள் மற்றும் டி.டி.வி தினகரனுக்கு பெருத்த ஏமாற்றத்தை கொடுத்தது. அதே வேளையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூட்டணிக்கு நிம்மதியை தந்துள்ளது. இந்த நிலையில் அதிமுகவின் அமைப்பை ஏற்றுக் கொண்டால் சசிகலாவை ஏற்றுக்கொள்ள வாய்ப்பிருக்கிறது என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

சசிகலா மீது வருத்தம் இல்லை
தனியார் தொலைக்காட்சியில் சசிகலா குறித்து கேட்ட கேள்விக்கு அவர் கூறியிருப்பதாவது:- கழக ஆட்சி அமைய அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என்று சசிகலா கூறியிருக்கிறார். அதிமுக ஆட்சி என்று நினைத்து அவர் சொல்லியிருந்தால் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உண்மையில் வரவேற்கிறேன். அதனை அவரது பெருந்தன்மையாகத்தான் நான் பார்க்கிறேன் . எனக்கு அவர் மீது முதலில் இருந்தே எனக்கு எந்த வருத்தமும் இல்லை.

அதிமுகவில் சேர்ப்பீர்களா?
ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வைத்து நிரபராதி என நிரூபித்தால் அவர் மீதிருந்த அவப்பெயர் விடுபடும் என்றுதான் சொன்னேன். அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. நான் சசிகலாவுடன் இருந்திருக்கிறேன். 32 ஆண்டு காலம் அவர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு வேண்டிய உதவிகளை செய்துள்ளார்.சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் அதிமுகவில் சேர்ப்பீர்களா என்று கேட்கறீர்கள். ஜனநாயக முறையில் அதிமுக இயங்குகிறது. தனிப்பட்டவருக்காகவோ, குடும்பத்திற்காகவோ இயங்கவில்லை. இந்த அமைப்பை அவர் ஏற்றுக்கொண்டால் சசிகலாவை ஏற்றுக்கொள்வதை பரிசீலிக்கலாம் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறினார்.












Click it and Unblock the Notifications