மாணவர்களால் வாசிக்க கூட முடியல.. திராவிட மாடல்னு சொல்லி நேரத்தை வீணடிக்காதீங்க.. சீறிய ஓபிஎஸ்!
சென்னை : ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், நான்கில் ஒருவரால் மட்டுமே இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தை வாசிக்க முடிகிறது என்றும், ஒன்றாம் வகுப்பு பயிலும் பெரும்பாலான மாணவர்களால் எழுத்துகளை படிக்க இயலவில்லை என வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
2022-ஆம் ஆண்டு கல்வி தகுதிநிலை அறிக்கையில், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை தமிழ்நாட்டில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் வாசிக்கும் திறன் குறைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக அரசை குற்றம்சாட்டியுள்ளார்.

எச்சரிக்கும் அளவுக்கு குறைந்துள்ளது
இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மனிதனாகப் பிறத்தல் அரிது, அவ்வாறு பிறந்தாலும், கல்வியில், நாட்டின் வளர்ச்சிக்கும் அடித்தளமாக விளங்குவது வற்றாத செல்வமாம் கல்வி என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இருக்க முடியாது. இப்படிப்பட்ட இன்றியமையாத்தன்மை வாய்ந்த கல்வியறிவைப் பெறுவதில் தமிழ்நாடு பின்தங்கி இருப்பதாக வந்துள்ள செய்தி மிகுந்த வருத்தமளிப்பதாகும். 2022-ஆம் ஆண்டு கல்வி தகுதிநிலை அறிக்கையில், தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை எச்சரிக்கை விடும் அளவுக்கு தமிழ்நாட்டில் குறைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசிக்கும் திறன்
ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், நான்கில் ஒருவரால் மட்டுமே இரண்டாம் வகுப்பு தமிழ்ப் பாடத்தை வாசிக்க முடிகிறது என்றும், ஒன்றாம் வகுப்பு பயிலும் பெரும்பாலான மாணவர்களால் எழுத்துக்களை படிக்க இயலவில்லை என்றும், இதே நிலை தான் இரண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்புகளிலும் நீடிக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 920 கிராமங்களில் உள்ள 3 முதல் 16 வயது வரையிலான 30,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியரிடம் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், ஒன்றாம் வகுப்பு பயிலும் 42 விழுக்காடு மாணவர்களால் 1 முதல் 9 வரையிலான எண்களைக்கூட படிக்க இயலவில்லை என்றும், இதேபோன்று ஆங்கில வார்த்தைகளை படிக்கும் திறன் ஐந்தாம் வகுப்பு மாணவர்களிடையே வெகுவாக குறைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும்
ஒன்றாம் வகுப்பு பயிலும் 53 விழுக்காடு மாணவ, மாணவியர் மற்றும் இரண்டாம் வகுப்பு பயிலும் 23 விழுக்காடு மாணவ, மாணவியரால் ஆங்கிலத்தில் உள்ள பெரிய எழுத்துகளைகூட படிக்க இயலவில்லை என்றும், வாசிக்கும் திறனும், கணிதத் திறனும் வெகுவாக குறைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. கல்வி அறிவில் தேசிய சராசரிக்கு கீழ் தமிழ்நாடு உள்ளது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. இந்த நிலை நீடித்தால், மாணவ, மாணவியரின் எதிர்காலம் கடுமையாக பாதிக்கப்படும். மாணவ, மாணவியரிடையே, குறிப்பாக தொடக்கக் கல்வி மாணவ, மாணவியரிடையே வாசிக்கும் திறன், புரிந்து கொள்ளும் தன்மை, கணிதத் திறன் ஆகியவை குறைந்ததற்கான காரணங்களை ஆராய்ந்து, அதைக் களைய முனைப்பான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதைப் பூர்த்தி செய்ய வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது.

நேரத்தை வீணடிக்காமல்
"திராவிட மாடல்" என்று சொல்லிக் கொண்டு நேரத்தை வீணடிக்காமல், 'எண்ணும், எழுத்துமாகிய இரண்டும் மக்களுக்கு கண் போன்றது' என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, வாசிக்கும் திறன், கணிதத் திறன், புரிந்து கொள்ளும் தன்மை ஆகியவற்றை மாணவ மாணவியரிடையே அதிகரிக்கத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக எடுக்க வேண்டும்" என ஓபிஎஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications