ஓ.பன்னீர்செல்வம் அதிரடி முடிவு.. ஒரே ஒரு தொகுதியில் தனி சின்னத்தில் போட்டி.. எந்த தொகுதி தெரியுமா?
சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகவும், ராமநாதபுரம் தொகுதியில் தங்கள் அணி போட்டியிட உள்ளது என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். ராமநாதபுரம் வேட்பாளராக ஓ.பன்னீர்செல்வம் களமிறங்குகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவுகிறது. அதாவது திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி, நாம் தமிழர் கட்சி ஆகியவை போட்டியிடுகின்றன. இதில் திமுக, அதிமுக கூட்டணி பங்கீடுகள் நிறைவடைந்துவிட்டன. இன்று பாஜகவும் கூட்டணியை இறுதி செய்துள்ளது.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மதியம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிந்தது. பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக கூட்டணியில் 4 கட்சிகள் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றன என்றார். மேலும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
39 தொகுதிகளில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்றால் பாமக 10, அமமுக 2, தமாகா 3, ஐஜேகே, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஏசி சண்முகத்தின் புதிய நீதி கட்சி , இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக வரும் லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் அணி போட்டியிடவில்லை என முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் இன்று மதியம் ஆலோசனை நடத்திய ஓபிஎஸ் மீண்டும் மாலையிலும் ஆலோசனை நடத்தினார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்து தனது முடிவை அறிவித்துள்ளார்.
அதன்படி, ஒரு தொகுதியில் போட்டியிட உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தை பெற சட்டப் போராட்டம் நடத்தி வருகிறோம் என்றும், இந்த முறை லோக்சபா தேர்தலில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் சுயேட்சை சின்னத்தில் நின்று பலத்தை காட்ட உள்ளோம் என்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.
மேலும், பாஜக கூட்டணியில் ராமநாதபுரம் தொகுதியில் நாங்கள் போட்டியிட உள்ளோம், சுயேட்சை சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்றும் அறிவித்தார். யார் வேட்பாளர் என செய்தியாளர்கள் கேட்க, வைத்திலிங்கம் பட்டென உடைத்துப் பேசினார். ராமநாதபுரம் தொகுதி வேட்பாளராக ஓ.பன்னிர்செல்வம் போட்டியிடுவார் என அறிவித்தார் வைத்திலிங்கம்.












Click it and Unblock the Notifications