அடுத்த 2 வாரங்கள் "அக்னி பரிட்சை".. அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான ஓபிஎஸ் வழக்கு.. இன்று விசாரணை
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த உள்ளது.
ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது.. விதிகளை மீறி இந்த பொதுக்குழு நடைபெற்றுள்ளதாக ஓ பன்னீர்செல்வம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடுத்தார். அதில், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டவில்லை. தலைமை கழகம் பொதுக்குழுவை கூட்ட முடியாது. விதியை மீறி இந்த பொதுக்குழு நடந்து உள்ளது என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதனால் இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

வழக்கில் செய்யப்பட்ட வாதம்
இந்த வழக்கில் எடப்பாடி தரப்பு வைத்த வாதத்தில் பொதுக்குழு உயர் நீதிமன்ற அனுமதியோடு சட்டப்படிதான் நடந்துள்ளது. பொதுக்குழுவை தலைமை நிர்வாக குழு கூட்ட உரிமை உள்ளது. இதற்கு முன்பே அப்படி பொதுக்குழு கூட்டப்பட்டு உள்ளது. உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பின்புதான் பொதுக்குழு கூட்டப்பட்டது. இதனால் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

ஓபிஎஸ் வாதம்
இந்த வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வைத்த வாதத்தில், எல்லை மீறி பொதுக்குழுவை கூட்டி அதில் எல்லை மீறி முடிவை எடுத்து உள்ளனர். கட்சியின் அனைத்து விதிகளும் மீறப்பட்டுள்ளது. இந்த பொதுக்குழுவை நடத்த உயர் நீதிமன்றம் கொடுத்த அனுமதியிலேயே விதி மீறல்கள் உள்ளன, உச்ச நீதிமன்ற உத்தரவை உயர் நீதிமன்றம் மதிக்கவில்லை. ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து விதியை மீறி நீக்கி உள்ளனர்.சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு வழக்கில் எங்கள் கையை கட்டிபோட்டுவிட்டது. உச்ச நீதிமன்றம் பொதுக்குழுவை அனுமதித்துவிட்டது என்று கூறி, எங்கள் வழக்கில் எதிராக தீர்ப்பு வழங்கிவிட்டனர் என்று கூறினார்.

தனி நீதிபதி
இதையடுத்து இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்தில் தனி நீதிபதி அமர்வு விசாரிக்கட்டும். இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் தனி நீதிபதி விசாரிக்கட்டும். சில விஷயங்களை மாற்ற முடியாது. உச்ச நீதிமன்றம் இதுவரை பிறப்பித்த உத்தரவுகள் உயர் நீதிமன்ற விசாரணையை பாதிக்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தது.
Recommended Video

விசாரணை
இந்த வழக்கை 2 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில்தான் இன்று உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு வருகிறது. இவர்தான் முன்பு பொதுக்குழுவை நடத்த அனுமதி அளித்து உத்தரவிட்டது. அவரின் அமர்வு முன்னிலையிலேயே மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.












Click it and Unblock the Notifications