ஓபிஎஸ் கையைப் பிடித்து தங்கம் தென்னரசு சொன்ன வார்த்தை.. பிடிவாதமா மறுத்துட்டாரே! திரும்பிய தலைகள்!
சென்னை : இன்று சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வம் திமுக அமைச்சர்களுடன் நெருக்கம் காட்டினார். நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் கையைப் பிடித்து கேட்டுக்கொண்டதும், ஓபிஎஸ் பிடிவாதமாக மறுத்ததும், அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா இன்று பதவியேற்றார். சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவிற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் 33 வது தலைமை நீதிபதியாக எஸ்.வி கங்காபூர்வாலா பதவியேற்றுக்கொண்டார். அடுத்த ஆண்டு மே மாதம் இவர் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிரித்த முகத்துடன் பதவியேற்பு விழாவுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை திமுக அமைச்சர்கள் சேகர்பாபு, ரகுபதி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் எழுந்து நின்று கைகூப்பியும், அவருக்கு கைகுலுக்கியும் வரவேற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம் ஓரமாக ஒரு இருக்கையில் அமரச் சென்றபோது அமைச்சர் தங்கம் தென்னரசு, ஓபிஎஸ் கையை பிடித்து முன்னால் அமருமாறு வற்புறுத்தினார். நீங்க முன்னால உட்காருங்க என கட்டாயப்படுத்தினார். ஆனால், ஓபிஎஸ், அதனை மறுத்து, தங்கம் தென்னரசுவை கையைப் பிடித்து அமர வைத்துவிட்டு, அவருக்கு அடுத்ததாகவே அமர்ந்தார். பின்னர், தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் ஓபிஎஸ்ஸுடன் சில நிமிடங்கள் உரையாடினர்.
பின்னர், சபாநாயகர் அப்பாவு அங்கு வந்த நிலையில், அமைச்சர்கள் அனைவரும் எழுந்து நின்று வணக்கம் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வமும் தனது இருக்கையில் இருந்து எழுந்து நின்று கைகூப்பினார். ஓபிஎஸ்ஸை கவனித்த சபாநாயகர் அப்பாவு, அவரை நோக்கி தனியாக பதில் வணக்கம் சொன்னார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு நிகழ்வைத் தொடர்ந்து தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், புதிதாக பதவியேற்றுள்ள தலைமை நீதிபதி சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவுக்கு பூக்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
இந்த பதவியேற்பு நிகழ்வில் திமுக அமைச்சர்கள் ஓபிஎஸ் உடன் காட்டிய நெருக்கம் அனைவராலும் கவனிக்கப்பட்டது. அதிமுக எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த வளர்மதி உள்ளிட்டோர் பின்வரிசையில் அமர்ந்திருந்த நிலையில், ஓபிஎஸ் அமைச்சர்களுடன் முதல் வரிசையில் அமர்ந்திருந்தார்.

அதிமுகவில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடந்த ஓராண்டு காலமாக சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓபிஎஸ் தற்போது தேர்தல் ஆணையம் எடப்பாடிக்கு சாதகமான முடிவுகளை வழங்கி வருவதால் மக்கள் மன்றத்தை நாடி வருகிறார். ஓபிஎஸ் திமுகவின் பி டீம் என எடப்பாடி பழனிசாமி தொடர்ச்சியாக விமர்சித்து வரும் நிலையில், இன்று திமுக அமைச்சர்களுடன் ஓபிஎஸ் காட்டிய நெருக்கம் அனைவரது பார்வையையும் திருப்பியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலின் போது சொத்து மதிப்பை மறைத்துக் காட்டியதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஓபிஎஸ் கையெழுத்து போட்டு படிவம் அளித்ததால் சாட்சியாக ஓபிஎஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications