அடேங்கப்பா.. பன்னீர் தரப்பை அதிரவைத்த எடப்பாடி.. சீக்கிரம் லிஸ்ட்டை எடுங்க - வேகப்படுத்திய ஓபிஎஸ்!
சென்னை : உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்த கூடுதல் மனுவால் அதிர்ந்து போயுள்ளது ஓ.பன்னீர்செல்வம் தரப்பு.
கட்சி நிதியைப் பயன்படுத்தவும், உள்ளாட்சி இடைத்தேர்தலில் போட்டியிடவும் ஓ.பன்னீர்செல்வம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், கட்சியை ஓபிஎஸ் முடக்க நினைப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது ஈபிஎஸ் அணி.
இதையடுத்து, தான் இந்த விஷயங்களில் மேற்கொண்ட நடவடிக்கைகளை வரிசைக்கிரமமாக தயார் செய்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கத் திட்டமிட்டுள்ளார் ஓபிஎஸ்.

மேல் முறையீட்டு மனு
கடந்த ஜூன் 23ஆம் தேதி பொதுக்குழுவுக்கு முன்னதாக பின்னிரவில் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தனர். 378 பக்கங்கள் கொண்ட மனுவை எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்துள்ளது. அதில், அதிமுக நிறுவனரான எம்ஜிஆரின் நோக்கத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், பொதுக்குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகியவற்றில் பெரும்பாலான உறுப்பினர்கள் ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என கோரிக்கை வைத்ததாகவும், இரண்டு நீதிபதி அடங்கிய அமர்வு அதிமுக உரிமைக்கு எதிராக தீர்ப்பு வழங்கியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பும் கேவியட் மனு
சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரிய எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஏதேனும் உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தால் தங்களது தரப்பு விளக்கத்தையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி கேவியட் மனுவை தாக்கல் செய்தார். முன்னதாக, அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம் என ஓபிஎஸ் தரப்பும் கேவியட் மனுத்தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

நாளை விசாரணை
இந்நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்தார். அதனை ஏற்று, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கவுள்ளது. இதனால் பரபரப்பு நிலவி வரும் நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

கூடுதல் மனு
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், "பொருளாளர் என்ற முறையில் கட்சி நிதியை ஓபிஎஸ் விடுவிக்காததால் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க இயலவில்லை. கட்சி செலவுக்கான தொகையை எடுக்க முடியாத நிலையை ஓபிஎஸ் ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவின் பொருளாளராக ஓபிஎஸ் கடமையை செய்ய தவறிவிட்டார். மேலும், உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த ஓபிஎஸ் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.

ஒத்துழைக்கவில்லை
அதிமுக நிர்வாகிகள் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்குமாறு ஓபிஎஸ்ஸுக்கு அழைப்பு விடுத்தும் அவர் பங்கேற்கவில்லை. தனக்கான செல்வாக்கையும், நம்பிக்கையையும் இழந்து விட்டதால்தான் பொதுக்குழுவுக்கு அவர் தடை கோருகிறார். அதிமுகவின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் ஓ.பன்னீர்செல்வம் முடக்கப் பார்க்கிறார். ஓபிஎஸ் செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்கக்கூடாது." எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி
எடப்பாடி பழனிசாமி தரப்பின் இந்த மனுவால் ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது. கட்சி நிதியில் இருந்து ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க ஒப்புதல் தெரிவித்து காசோலை அனுப்பியும் எடப்பாடி பழனிசாமிதான் கையெழுத்திடவில்லை. உள்ளாட்சி இடைத்தேர்தலில் இரட்டை இலைச் சின்னம் வழங்க ஓபிஎஸ் கையெழுத்திட தயாராக இருந்தும், எடப்பாடி பழனிசாமி கையெழுத்திடவில்லை, அதனால் அதிமுக தேர்தலையே புறக்கணிக்கும் சூழல் ஏற்பட்டது. இப்படி எல்லா தாமதத்தையும் எடப்பாடி பழனிசாமியே செய்துவிட்டு ஓபிஎஸ் மீது பழி போடுவதா எனக் கொந்தளித்துப் போயுள்ளனர்.

ஆவணங்களை தயார் செய்ய
இந்த விஷயங்களையே உச்ச நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதங்களாக வைக்கவும் ஓ.பி.எஸ் தரப்பு ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இன்றும் தனது ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி, ஓபிஎஸ், எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பிய கடிதங்களின் நகல்களை நாள், நேரம் என வரிசைக்கிரமமாக அடுக்கி உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருகிறது.
Recommended Video

பொய் சொல்கிறார்
எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களின் முரண்பாட்டைச் சுட்டிக்காட்டி வாதாட ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமி தரப்பு பொய்யான தகவல்களை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதாக வாதாட வேண்டும் என ஆலோசனையில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி எந்தவகையான தாக்குதலைக் கையாள்வார் என்பது நாளை நடைபெறவிருக்கும் விசாரணையில் தெரியவரும். பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications