கருணாநிதி ஸ்டைலில் சசி! எம்ஜிஆர் திட்டத்தை கையில் எடுத்த ஓபிஎஸ்! வெலவெலத்த எடப்பாடி! ஓ இதான் மேட்டரா
சென்னை: அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா இருவரும் ஒரே நேரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருப்பதை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு தீவிரமாக கண்காணித்து வருகிறதாம். இந்த சுற்றிப்பயணத்தில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை எடப்பாடி தரப்பு மிக தீவிரமாக நோட்டமிட்டு வருகிறதாம்.
Recommended Video
அதிமுக தொடங்கப்பட்ட 1972 காலகட்டத்திற்கு முன்பாக எம்ஜிஆர் தனக்கான ஆதரவை திரட்ட தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதேபோல் தேர்தல் நேரத்திலும் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
பரபரக்கும் மகாராஷ்டிர அரசியல் சதுரங்கம்.. ஏக்நாத் ஷிண்டே முன் இருக்கும் ”5 வாய்ப்புகள்”
திமுக உடைந்த பின் தனக்கான ஆதரவை தக்க வைத்துக்கொள்ள கருணாநிதியும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். எம்ஜிஆருக்கு போட்டியாக இவர் தீவிர பயணங்களை மேற்கொண்டார்.
பயணம்
இந்த இரண்டு பயணங்களிலும் ஒரு வேறுபாடு மட்டும் இருக்கும். எப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும்... கருணாநிதி சென்னையில் இருந்து துவங்கி வடமாவட்டங்கள் வழியாக தெற்கு நோக்கி செல்வார். அதேபோல் எம்ஜிஆர் தெற்கில் இருந்து துவங்கி வடமாவட்டங்களுக்கு வருவார். எம்ஜிஆரின் தென் மாவட்ட பயணங்கள் அப்போது அவருக்கு பெரிய அளவில் உதவியது. வரிசையாக தேர்தலில் வெற்றிபெற அவருக்கு இந்த பயணம் முக்கிய காரணமாக இருந்தது.
ஓபிஎஸ்
இந்த நிலையில்தான்.. அதே பாணியை ஓபிஎஸ் கையில் எடுத்துள்ளதாக அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள். ஓபிஎஸ்ஸுக்கு அதிமுகவில் தற்போது பெரிய ஆதரவு இல்லை. அதே சமயம்.. அவர் தென் மண்டலத்தில் நிர்வாகிகளை சந்தித்தால் நிலைமை மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதிமுகவிற்கு உள்ளே முக்குலத்தோர் பிரிந்து கிடக்கிறார்கள். சாதி சங்கங்கள் பல தனி தனியாக இயங்கி வருகின்றன. இவற்றை ஒருங்கிணைத்தாலே ஓபிஎஸ்ஸுக்கு பெரிய ஆதரவு கிடைக்கும். இவ்வளவு நாள் அதை செய்யாமல் இருந்தவர் இப்போதுதான் அதை செய்கிறார் என்கிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள்.
பலன் கொடுக்கும்
தென் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடிக்கு கீழ் கடுமையாக ஓரம்கட்டப்பட்டனர். சில தென் மண்டலா முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி கேம்பில் இருந்தாலும், அந்த அமைச்சர்களை தவிர மற்ற மாவட்ட செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் கட்சியில் மோசமாக ஓரம்கட்டப்பட்டனர். ஒரு காண்டிராக்ட் கூட தென் மண்டலத்திற்கு வரவில்லை.. கொங்கு மண்டல சமுதாயத்தினருக்கு மட்டுமே முக்கியத்துவம் தருகிறார்கள் என்ற அதிருப்தியில் இருந்துள்ளனர். இந்த நிலையில்தான் ஓபிஎஸ்ஸின் தென் மண்டல பயணம் காரணமாக தென் மண்டல நிர்வாகிகள் எடப்பாடிக்கு எதிராக திரும்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எம்ஜிஆர்
அன்று எம்ஜிஆர் செய்ததை இன்று தான் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம் ஓபிஎஸ். இது ஒரு பக்கம் இருக்க அன்று கருணாநிதி செய்தது போலவே வடக்கில் இருந்து தெற்கு நோக்கி சசிகலா பயணம் மேற்கொண்டுள்ளார். சென்னையில் இருந்து வட மாவட்டங்கள் முழுக்க பயணம் மேற்கொள்வதாக சசிகலா அறிவித்து நேற்று பயணத்தை தொடங்கினார். முன்பை விட இந்த முறை சசிகலா பயணத்தில் கொஞ்சம் கூட்டம் கூடுதலாக உள்ளது.
எடப்பாடி ஆலோசனை
ஒரு பக்கம் ஓபிஎஸ் தென் மாவட்டங்களிலும், இன்னொரு பக்கம் சசிகலா வடமாவட்டங்களிலும் பயணம் மேற்கொள்வதை பார்த்து எடப்பாடி தரப்பு கொஞ்சம் அதிர்ச்சியில் இருக்கிறதாம். இரண்டு பேரும் சொல்லிவைத்து செய்கிறார்கள். இதற்கு பின் ஏதோ திட்டம் இருக்கிறது. திட்டமிட்டு, பேசி வைத்து இருவரும் பயணம் மேற்கொள்கிறார்கள் என்று எடப்பாடி தரப்பு சந்தேகத்தில் இருக்கிறதாம். இதற்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட வேண்டும் என்ற திட்டத்திலும் எடப்பாடி தரப்பு இருக்கிறதாம்.
என்ன பிளான்?
அதாவது வடமாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் எடப்பாடிக்கு எதிராக இருக்கும் நிர்வாகிகளை சசி - ஓபிஎஸ் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இதன் மூலம் அதிமுகவில் எடப்பாடி ஆதரவாளர்களை உடைக்க இரண்டு பேரும் முடிவு செய்துள்ளனர் என்று எடப்பாடி தரப்பு அச்சத்தில் இருக்கிறதாம். இதற்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட வேண்டும்.. மொத்தமாக இதற்கு புல் ஸ்டாப் வைக்க வேண்டும் என்று திட்டமிட்டுதான் இன்று அவசர தலைமை கழக கூட்டத்தை எடப்பாடி தரப்பு கூட்ட உள்ளதாம். இதில் கண்டிப்பாக பெரிய முடிவு எடுக்கப்படலாம் என்று அதிமுக தரப்பினர் கூறுகிறார்கள்.