லோக்சபா தேர்தலில் ஓபிஎஸ் பிளான் என்ன? முக்கிய வியூகத்தை அறிவிக்க போறாராம்.. ஒரே நாளில் பரபர களம்!
சென்னை: ஆகஸ்ட் 20ஆம் தேதி தமிழ்நாடு அரசியல் களத்தில் மும்முனை மோதல் நிகழ இருக்கிறது. ஒருபக்கம் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்த, இன்னொரு பக்கம் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்த, ஓபிஎஸ்ஸும் மா.செக்கள் கூட்டத்தை நடத்துகிறார். அதோடு லோக்சபா தேர்தல் தொடர்பாக முக்கியமான அறிவிப்பையும் வெளியிட உள்ளாராம் ஓபிஎஸ்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் பொன்விழா மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டை பிரமாண்டமான முறையில் நடத்த அதிமுகவினர் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதே நாளில், நீட் எதிர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளது திமுக. ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும் திமுக உண்ணாவிரத போராட்டம் நடத்தவுள்ளது. சென்னையில் நடைபெறும் உண்னாவிரத போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அதே நாளில், ஓ.பன்னீர்செல்வமும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்த உள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள ஒய்எம்சிஏ ஆடிட்டோரியத்தில் ஆகஸ்ட் 20-ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. ஓ.அபன்னீர்செல்வம் அணியின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தனது செல்வாக்கை நிரூபிக்கும் வகையில் மதுரையில் எடப்பாடி பழனிசாமி மாநாடு நடத்தும் அதே நாளில், எடப்பாடி பழனிசாமி அணிக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஓபிஎஸ்ஸூம் களத்தில் இறங்கியுள்ளார். அன்று மாலை லோக்சபா தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவிப்பையும் வெளியிட இருக்கிறாராம் ஓபிஎஸ். இதனால், அரசியல் அரங்கில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்புச் செயலாளர் பெங்களூர் புகழேந்தி, "அதிமுக ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடக்கும் ஆலோசனைக் கூட்டத்தில் நாங்கள் அனைவரும் பங்கேற்க உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் என்ன செய்யப் போகிறோம், எங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து முக்கிய அறிவிப்பை ஆகஸ்ட் 20ஆம் தேதி மாலை ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்.
இதுவரை பல மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்துள்ளது. கோடநாடு கொலை கொள்ளை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், யார் உண்மையான குற்றவாளிகள் என்பதை கண்டறிந்து தண்டிக்க வேண்டும் என்று கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தியனோம். எவ்வளவு கூட்டம் கூடியது என்பதை எல்லோரும் பார்த்தீர்கள்.
திருச்சி பொதுக்கூட்டத்தில் கடல் அலை என தொண்டர்கள் கூட்டம் கூடியது. அதற்கு எதிராக ஒரு கூட்டத்தை திரட்ட மதுரையில் மாநாடு நடத்துகிறார் எடப்பாடி பழனிசாமி. சினிமா தியேட்டருக்கு போய் இலவசமாக டிக்கெட் கொடுத்து மாநாட்டுக்கு அழைக்கும் நிலைமைக்கு போயிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட சூழலில்தான் நாங்கள் முன்பே திட்டமிட்டபடி ஆகஸ்ட் 20ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்துகிறோம். நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக மிக முக்கியமான அறிவிப்புகளை ஓபிஎஸ் வெளியிடுவார். தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி என்பது ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்ட ஓபிஎஸ் தலைமையில் தான் அமையும். அந்தக் கூட்டணி தான் வெற்றிபெறும்.
எடப்பாடி பழனிசாமிக்கு இங்கு வேலையே கிடையாது. என்ன நடக்கப் போகிறதென்று பாருங்கள். ஆகஸ்ட் 20ஆம் தேதி ஓபிஎஸ், கூட்டணியை அறிவிக்கவும் வாய்ப்பிருக்கிறது. பாஜக முடிவு பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. அதிமுக சார்பில் நாங்கள் என்ன முடிவை எடுக்கப்போகிறோம் என்பதை ஓபிஎஸ் அறிவிப்பார்." எனத் தெரிவித்துள்ளார். ஆக, ஆகஸ்ட் 20ஆம் தேதி அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லை. என்ன நடக்கிறதென்று பொறுத்திருந்து பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications