தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தை குழிதோண்டி புதைத்த ஓ.பன்னீர்செல்வம்! கடைசி வரை சட்டப்போராட்டம்!
சென்னை: தனிக்கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்தை குழி தோண்டி புதைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். கடைசி வரை சட்டப்போராட்டம் நடத்தியே காலத்தை கழிப்பது என முடிவெடுத்துவிட்டார் போல் தெரிகிறது.
இதனால் அவரை நம்பி சென்ற நிர்வாகிகள் பலரும் மெதுவாக கழன்று கொள்ளும் முடிவுக்கு வந்துவிட்டார்கள் போல் தெரிகிறது. மத்திய மாவட்டத்தை சேர்ந்த மாஜி அமைச்சர் தரப்பிடம் கூட எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் தென் மாவட்டங்களிலும் ஓ.பன்னீர்செல்வம் பக்கமிருந்து முக்கிய பிரமுகர்களை வளைக்க தீவிரமாக வேலை நடந்து வருகிறது.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஓ.பன்னீர்செல்வம் கூடாரத்தை கலகலக்க வைக்க வேண்டும் என காய் நகர்த்தி வருகிறது எடப்பாடி தரப்பு. இதனிடையே அதிமுக கொடி, சின்னம் உள்ளிட்டவைகளை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதால் அவர் புதிதாக தனிக்கட்சி ஆரம்பிக்கவுள்ளார் என்ற தகவல் உலா வந்தன. ஆனால் அப்படியொரு எண்ணமே ஓ.பன்னீர்செல்வத்துக்கு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தனிக்கட்சி தொடங்கி நடத்துவது என்றால் சாதாரண காரியமல்ல என்பதும் எவ்வளவு செலவாகும் என்பதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு தெரியாதது அல்ல. இதனால் தான் கடைசி வரை சட்டப்போராட்டத்தை கைவிடாமல் நடத்துவது என்பதில் மட்டும் இப்போதைக்கு ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக உள்ளார். டிடிவி தினகரனுடன் ஓ.பன்னீர்செல்வம் இணக்கம் காட்டுவதால் சசிகலாவையும் அவரால் சந்திக்க முடியவில்லை. சொல்வார் பேச்சைக் கேட்டு அரசியலில் அகலக் கால் வைத்தது போதும் சாமி எனக் கருதும் ஓ.பன்னீர்செல்வம் வெற்றியோ, தோல்வியோ இனி ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என நினைக்கிறார்.
பாஜக தலைமை தன்னை கைவிடாது என ஓ.பன்னீர்செல்வம் மலை போல் நம்பியிருந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் டெல்லியிலிருந்து எந்த உதவியும் கிடைக்கவில்லை. இது குறித்த வருத்தம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டுவதற்கான நேரம் இதுவல்ல என பொறுமை காத்து வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். திருச்சியில் நடத்தியதை போல் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஒரு மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications