அரசியலில் உச்சக்கட்ட துரோகம்.. மீண்டும் 'அதிர' வைக்கும் ஓ.பி.எஸ்.. என்னாச்சு?
சென்னை: தமிழக அரசியலில் உச்சக்கட்ட துரோகம் நடந்து கொண்டிருப்பதாக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் கடந்த ஐந்தாண்டு காலத்தை எப்போதும் மறக்க முடியாது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ரெக்கார்டு படைக்க, அதை முழுவதும் அனுபவிக்க முடியாமல் அவர் காலமானார்.
அதன் பிறகு, திமுக தலைவர் கருணாநிதியும் காலமாக, 1967க்கு பிறகு முதன் முறையாக கருணாநிதி - ஜெயலலிதா இல்லாத தேர்தலை திமுகவும் அதிமுகவும் எதிர் கொள்கின்றன.
மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் அதிமுக படாதபாடு பட்டுக் கொண்டிருக்க, திமுக கருத்துக்கணிப்புகளில் அதிகம் ஸ்கோர் செய்து சேஃப் zone-ல் உள்ளது. இதுவரை வெளியான அனைத்து கருத்துக்கணிப்புகளிலும் திமுக கூட்டணியே ஆட்சியைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் செய்தியாளர்களுக்கு ஓ.பி.எஸ் பேட்டி அளித்துள்ளார். அதில், முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்ய வாய்ப்பிருந்தும், எடப்பாடி பழனிசாமிக்கு விட்டுக் கொடுத்தது ஏன்? என்ற கேள்விக்கு, "ஏற்கனவே முதல்வராக நியமனம் செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி, நான்கு வருடங்களாக சீரான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். மக்களின் முழு நம்பிக்கையை பெற்றிருக்கிறார். எனவே முதல்வராக அவரே பதவியில் நீடிக்க வேண்டும் என்பதை நானே ஒப்புக் கொண்டு தான் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அவரை அறிவித்தேன்" என்றார்.
மேலும், இந்த தேர்தலில் உங்களுடன் ஒன்றாக பயணித்தவர்கள், இப்போது வெவ்வேறு இடத்திற்கு சென்று எதிரெதிர் துருவங்களாக நிற்கின்றனரே? என்ற கேள்விக்கு, "அரசியலில் உச்சக்கட்ட துரோகத்தை அவர்கள் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவின் விசுவாசமான தொண்டர்கள், இரத்தம் சிந்தி உழைத்த உழைப்பினால் அவர்கள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிகள் பெற்று, வசதியான வாழ்க்கையை பெற்று, இன்று எங்களது ஒரே எதிரியான திமுகவுடன் இணைந்து கொண்டு அரசியல் களத்தில், "வளர்த்த கிடா மார்பில் முட்டுவது போல் செயல்படுகின்றனர்" என்று ஓ.பி.எஸ் தெரிவித்துள்ளார்.