“கூலா” இருங்க.. எனக்கு “எண்டே” கிடையாது! மேல இருக்கவங்க பாத்துப்பாங்க - ஆதரவாளர்களை தேற்றும் ஒபிஎஸ்
சென்னை: எடப்பாடி பழனிசாமி உடனான அதிமுக தலைமை போட்டி தொடர்ந்து வரும் சூழலில் தென் மாவட்டத்தில் உள்ள தனது ஆதரவாளர்களை திரட்ட மூக்கையா தேவரின் நினைவு நாளை கையில் எடுத்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.
ஜூன் 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் எடப்பாடி பழனிசாமியின் இடைக்கால பொதுச்செயலாளர் பதவி பறிபோனது.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமை எடப்பாடி பழனிசாமி அமர்வு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற இருவர் அமர்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. இதனால் மீண்டும் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் ஆகியுள்ளார்.

மேல்முறையீடு
இந்த நிலையில் அடுத்தக்கட்ட நகர்வு குறித்து தீவிர ஆலோசனையில் ஓ.பன்னீர்செல்வம் ஈடுபட்டு இருக்கிறார். தீர்ப்பு எதிராக வந்தாலும் சட்டப்போராட்டத்தை தொடரப்போவதாக அறிவித்து இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். இது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடனும் அலோசனை மேற்கொண்டும் வரும் பன்னீர்செல்வம், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

ஆதரவாளர்கள் சோர்வு
அதே நேரம் ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீடு வழக்கு தொடர்ந்தால் தங்களிடமும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி அவர் தரப்பு கேவியட் மனுத் தாக்கல் செய்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயர்நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பால் உற்சாகத்தில் இருந்த ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தற்போது சோர்வடைந்து இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெருக்கடி
இதனால் ஒரு பக்கம் சட்டப்போராட்டத்துக்கு மத்தியில் தன்னுடைய ஆதாரவாளர்களை தக்க வைக்க வேண்டும் என்ற நெருக்கடியும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஏற்பட்டு உள்ளது. அதேநேரம் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த அதிருப்தியாளர்களுக்கு தூண்டில் போடும் பணியையும் தொடர்ந்து மேற்கொள்ள அறிவுறுத்தி இருக்கிறதாம் தேனி தரப்பு.

டெல்லி
உயர்நீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பு இறுதியானது கிடையாது என்றும், உச்சநீதிமன்றம் செல்வோம். அடுத்து தேர்தல் ஆணையம் இருக்கிறது என்று கூறி தன்னுடைய ஆதரவாளர்களை ஓ.பன்னீர்செல்வம் தேற்றி வருகிறாராம். அதேபோல் டெல்லியின் ஆதரவும் தனக்கே இருப்பதால் இறுதி வெற்றி நமக்குதான் கிடைக்கும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு அவநம்பிக்கையில் இருக்கும் தங்களின் ஆதரவாளர்களை தேற்றி வருகிறதாம்.












Click it and Unblock the Notifications