கொடி கட்டி கிளம்புங்க.. பவரை காட்டணும்.. எடப்பாடிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மாஸ் பிளான்!
சென்னை : எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்து வருவதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மாஸ் காட்ட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஒற்றைத் தலைமை விவகாரத்தில் முரண்டு பிடிக்கும் ஓபிஎஸ்ஸை சமாதானப்படுத்த கடந்த 5 நாட்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் மாறி மாறி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஆனால் எடப்பாடி தரப்பினர் ஒற்றைத் தலைமை கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். ஓ.பி.எஸ் தரப்பினர் இரட்டைத் தலைமை தான் என ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

அதிமுகவில் முட்டல்
அதிமுக பொதுக்குழுவுக்கு முன்னதாக கடந்த 14ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கிளம்பிய 'ஒற்றைத் தலைமை' முழக்கம் கட்சியை ரெண்டாக்கி விட்டது. எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் ஒற்றைத் தலைமை வேண்டும் எனப் பேசியதைத் தொடர்ந்து, அப்செட்டான ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இரட்டைத் தலைமைதான் இருக்கும், ஒற்றைத் தலைமைக்கு வாய்ப்பே இல்லை என அவர் அடித்துச் சொன்ன நேரத்தில் எதிர்முகாமில், ஒற்றைத் தலைமைதான் அதுவும் எடப்பாடி தான் என திட்டமிட்டு வருகின்றனர்.

ஒற்றைக் காலில்
இருவரும் இரண்டு முனைகளில் நிற்பதால் ஐந்து நாட்களாக ஆலோசனை நடத்தியும் சுமூகமான முடிவு இதுவரை எட்டப்படவில்லை. ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவரையும் சமாதானப்படுத்த கடந்த 5 நாட்களாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் இருவரையும் மாறி மாறி சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால் எடப்பாடி தரப்பினர் ஒற்றைத் தலைமை கோரிக்கையில் உறுதியாக இருக்கின்றனர். ஓ.பி.எஸ் தரப்பினர் இரட்டைத் தலைமை தான் என ஒற்றைக் காலில் நிற்கின்றனர்.

தீர்மானம்
ஒற்றைத் தலைமை தீர்மானத்தை பொதுக்குழுவில் கொண்டு வந்தால் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் எனது கையெழுத்து தேவை. கையெழுத்து இல்லாமல் தீர்மானத்தை கொண்டுவர முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் எச்சரித்தார். இது பொதுச் செயலாளர் பதவியை கைப்பற்றி விடலாம் என கணக்குப் போட்ட எடப்பாடி பழனிசாமிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தனக்கு செல்வாக்கை காட்டும் வகையில் கட்சியினரின் ஆதரவை திரட்டி வருகிறார்.

அணி செயலாளர்கள் ஆதரவு
இன்று எடப்பாடி பழனிசாமி இல்லத்தில எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் என்.ஆர்.சிவபதி, இணை செயலாளர் டாக்டர் சுனில், துணை செயலாளர் கடலூர் கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். மேலும் அதிமுக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர் பரமசிவம் ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர். அதிலும் முன்னாள் அமைச்சர் சிவபதி பெரும் படையை திரட்டிக்கொண்டு ஊர்வலம் போல வந்து மாஸ் காட்டினார்.

தேனி நிர்வாகிகளும்
ஓ.பன்னீர்செல்வத்துக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அவரது சொந்த மாவட்டமான தேனியில் இருந்தே ஆட்களை இறக்கினார் எடப்பாடி பழனிசாமி. தேனி நகர செயலாளர் கிருஷ்ணகுமார், பொருளாளர் சோலை ராஜா, முன்னாள் மாவட்ட துணை செயலாளர் ராமர், கம்பம் ஒன்றிய செயலாளர் இளைய நம்பி, முன்னாள் எம்எல்ஏ ஜக்கையன், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ், எம்ஜிஆர் மன்ற நிர்வாகி செந்தட்டி காளை, சின்னமனூர் ஒன்றிய அவைத்தலைவர் கண்ணன், ஆண்டிப்பட்டி பேரூர் கழக செயலாளர் பொன்முருகன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

தென் மாவட்ட புள்ளிகளும்
மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானோரும், எம்.எல்.ஏக்களில் பெரும்பாலானோரும் எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவாக உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களும் ஈபிஎஸ் பக்கமே உள்ளனர். முன்னாள் அமைச்சர்கள் பலரும் கூட எடப்பாடி பக்கமே முழுமையாகச் சாய்ந்துவிட்டனர். தென் மாவட்டங்களைச் சேர்ந்த அமைச்சர்களையும் கைக்குள் வைத்திருப்பதால் கெத்தாக இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஓ.பி.எஸ் அணி
அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், தஞ்சை மாவட்ட செயலாளருமான வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வம் பக்கம் நிற்கிறார். இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஓ.பி.எஸ் பக்கம் ஆதரவு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கிறார். திருச்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஓபிஎஸ் பக்கம் இருக்கிறார்.

ஆதரவு வேட்டை
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சென்னையில் குவிந்து வருவதால், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் மாஸ் காட்ட வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டு உள்ளனராம். இதற்காக தங்கள் பகுதி நிர்வாகிகளிடம் வேன்களை பிடித்து சென்னைக்கு ஆட்களை அழைத்து வந்து ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கும் ஆதரவைக் காட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளனராம். இதனால் வரும் நாட்களில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அதிமுக கொடி கட்டிய பேருந்துகள் சென்னை நோக்கி விரையும் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.












Click it and Unblock the Notifications