முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன ஓ.பன்னீர்செல்வம்.. அப்போ எடப்பாடிக்கு? வார்த்தையை கவனிச்சீங்களா?
சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ரவி, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்.
ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அண்மையில் காலாமானார். அவரது மறைவையொட்டி பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர். எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பின்போது இரங்கல் தெரிவித்தார்.
தனது தாயாரின் மறைவால் வேதனையில் இருந்த தருணத்தில் நேரிலும், போனிலும், சமூக வலைதளங்கள், ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் ஓபிஎஸ்.

ஓபிஎஸ் சோகம்
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் அண்மையில் காலமானார். வயது முதிர்வின் காரணமாக அவரின் உடல்நிலை மோசமாகி வந்த நிலையில், அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 24ஆம் தேதி காலமானார். தனது தாயாரின் மறைவால் கதறி அழுதார் ஓ.பன்னீர்செல்வம். ஓபிஎஸ்ஸின் தாயார் பழனியம்மாளின் இறுதிச் சடங்குகள் முடிந்து அவரது உடல் 25ஆம் தேதி மாலை பெரியகுளம் நகராட்சி பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதல்வர் ஆறுதல்
ஓபிஎஸ் தாயார் உடலுக்கு உறவினர்கள், அதிமுகவினர் மற்றும் பல்வேறு கட்சியைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். ஓபிஎஸ்ஸை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு, அவரது தாயார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததோடு, தனது தாயார் மறைவால் வாடும் ஓபிஎஸ்ஸுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இரங்கல்
முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியும் வெளியிட்டிருந்தார். "முன்னாள் முதலமைச்சர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல்நலக்குறைவின் காரணமாக மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வேதனையடைகிறேன். ஆளாக்கிய அன்னையை இழந்து தவிக்கும் அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தலைவர்கள் இரங்கல்
சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் இரங்கல் செய்தி வெளியிட்டனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஓபிஎஸ் வீட்டுக்கு நேரில் சென்று அவருக்கு ஆறுதல் தெரிவித்தார். ஆனால், ஓபிஎஸ் தாயார் உடல் தகனம் செய்யப்படும் வரை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவிக்காமல் இருந்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது நிருபர் ஒருவர் கேட்டதும், ஓபிஎஸ்ஸின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார் எடப்பாடி பழனிசாமி.

ஓபிஎஸ் நன்றி
இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம், தனது தாயாரின் மறைவால் வேதனையில் இருந்த தருணத்தில் நேரிலும், தொலைபேசி மூலமும், சமூக வலைதளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகவும் ஆறுதல் தெரிவித்த தமிழ்நாடு ஆளுநர், தெலுங்கானா ஆளுநர், ஜார்க்கண்ட் ஆளுநர், தமிழ்நாடு முதலமைச்சர், அமைச்சர் பெருமக்கள், பிறகட்சித் தலைவர்கள், முன்னாள் இந்நாள் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்., அஇஅதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், தொண்டர்கள், திரையுலகைச் சார்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications