சுற்றுப்பயணம் உறுதி! என்ன செலவானாலும் பார்த்துக்கலாம்! உற்சாகமான மா.செ.க்கள்! ஓபிஎஸ் போட்ட மாஸ் ப்ளான்
சென்னை : தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனக் கூறியதாகவும் அதிக அளவில் ஆட்களை அழைத்து வர உத்தரவிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், பணத்தை வாரி இறைக்க தயாராகி உள்ளதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் அதிமுக விவகாரம் தொடர்பாக ஏதாவது ஒரு பிரச்சனை ஏற்பட்டு கொண்டே தான் இருக்கிறது. ஒருபுறம் சட்டப் போராட்டம் ஒருபுறம் ஆலோசனை என அதகளப்படுத்தி வருகிறார் ஓபிஎஸ்.

எடப்பாடி பழனிசாமி
மற்றொருபுறம் தனது சாமர்த்தியமான அரசியல் காய் நகர்த்தல்கள் மூலம் ஒற்றை தலைமை விவகாரத்தில் எண்பது சதவீதம் வெற்றி பெற்ற எடப்பாடி பழனிச்சாமி அதனை முழுமையாக செயல்படுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

ஓபிஎஸ் தரப்பு
தேர்தல் ஆணையம் நீதிமன்றம் என இரு அமைப்புகளில் இருவரின் எதிர்காலம் அடங்கி இருக்கிறது என்றே கூறலாம். பொதுக்குழு கூட்டம் செல்லாது என பல்வேறு வாதங்களை ஓபிஎஸ் தரப்பு எடுத்து வைத்த நிலையில் விதிகள் படி தான் பொது குழு கூட்டம் நடத்தப்பட்டது என எடப்பாடி தரப்பு வாதிட்டது. இரு தரப்புமே அனல் பறக்கும் வாதங்களை முன்வைத்து நிலையில் தீர்ப்பை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் சற்றே ஓய்ந்து இருந்தாலும் இரு தரப்பையும் பதட்டத்திலேயே வைத்துள்ளது.

எடப்பாடி உறுதி
தீர்ப்பு வருவதை பொறுத்து தான் அடுத்த கட்ட நடவடிக்கை என ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருமே இருக்கும் நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது. தீர்ப்பு தனக்கு சாதகமாக வந்தால் அதிமுக ஒருங்கிணைப்பாளராக தொடர்வதற்கும் எதிராக வந்தால் டிடிவி தினகரன் சசிகலா ஆகியோருடன் இணைந்து செயல்பட ஓ.பன்னீர்செல்வம் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

சுற்றுப்பயணம்
அதே நேரத்தில் தீர்ப்பு எப்படி வந்தாலும் பெரும்பாலான மாவட்ட செயலாளர்களின் ஆதரவு தனக்கு இருப்பதால் மேல்முறையீட்டில் பார்த்துக் கொள்ளலாம் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியாக இருக்கிறார். தற்போது பல்வேறு மாவட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் இதே போல ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

மாவட்ட செயலாளர்கள்
குறிப்பாக தென் மாவட்டங்களில் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என தனது ஆதரவு மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் என்ன செலவானாலும் பரவாயில்லை அதிகளவு ஆட்களை திரட்டி வரவேண்டும் என உத்தரவிட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பல மாவட்டங்களில் மாவட்ட செயலாளர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தங்களுக்கு பதவி கிடைத்தால் போதும் என்ற முனைப்பில் இருக்கும் பிற மாவட்ட ஓபிஎஸ் ஆதரவு நிர்வாகிகள் இதற்காக தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். எப்படியாவது கூட்டத்தை திரட்டி ஓபிஎஸ் இடம் நல்ல பெயரை சம்பாதித்து விட வேண்டும் என தீவிரம் காட்டி வரும் அவர்கள் தற்போது உள்ளூரில் ஆங்காங்கே ஆலோசனை கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications