இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.. ஸ்டாலினின் நடவடிக்கைகளை வரவேற்ற ஓபிஎஸ்.. கையோடு வைத்த கோரிக்கை
சென்னை : கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின் கடைகள் செயல்படவும், சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கும் தடை விதித்துள்ளார். இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. 1700ல் இருநது 2000த்தை நெருங்கி உள்ளது. சென்னை, கோவை உள்பட முக்கிய நகரங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது.
காங். மிஷன் 2022-க்கு செட்பேக்- மாஜி மணிப்பூர் தலைவர் பாஜகவில் இணைந்தார்- 8 எம்.எல்.ஏக்கள் எஸ்கேப்?
இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கண்டிப்புடன் செயல்படுத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக சென்னையில் திநகர், பாண்டிபஜார், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை உள்பட 9 இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
தடுப்பு நடவடிக்கைகள்
இதேபோல் கொரோனா அதிகரித்து வரும் மற்றொரு நகரான கோவையில் காந்திபுரம், உக்கடம், அவினாசி ரோடு, துடியலூர் ரோடு, ஒப்பணக்கார வீதி உள்பட முக்கிய பகுதிகளில் கடைகள் திறப்பு நேரம் குறைக்கப்பட்டுள்ளது. ஞாயிறுகளில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு கோயில்களுக்கு பக்தர்கள் செல்லவும் தடை விதித்துள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வரவேற்றுள்ளார்.
அச்சம் எழுந்துள்ளது
இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 'கொரோனாநோய்த் தொற்றின் தாக்கம் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்ததையடுத்து, வணிக வளாகங்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கூடிய கூட்டத்தைச் சுட்டிக்காட்டி, இது மூன்றாவது அலைக்கு வழிவகுத்து விடுமோ என்ற அச்சத்தினை நான் 12-07-2021 அன்று அறிக்கை வாயிலாக வெளிப்படுத்தியிருந்தேன். தற்போது, இரண்டு, மூன்று நாட்களாக கொரோனாகுறித்து வெளிவரும் அரசின் அறிக்கையினைப் பார்க்கும்போது, மூன்றாவது அலை தவிர்க்க முடியாததாகி விடுமோ என்ற சூழ்நிலை எழுந்துள்ளது.
சென்னையில் அதிகரிப்பு
28-07-2021 அன்று 1,756 ஆக இருந்த கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, 29-07-2021 அன்று 1,859 ஆகவும்,
30-07-2021 அன்று 1,947 ஆகவும், 31-07-2021 அன்று 1,986 ஆகவும் உயர்ந்துள்ளது. 28-07-2021 அன்று கொரோனாநோய்த் தொற்று
உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையை 31-07-2021 அன்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது,
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 230 உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் கொரோனாபாதிப்பு அதிகரித்து இருந்தாலும், சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, நாமக்கல், தஞ்சாவூர், திருவள்ளூர் போன்ற மாவட்டங்களில்தான் கணிசமான அளவுக்கு கொரோனாதொற்று அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் அரசு விதிக்கின்ற கட்டுப்பாடுகள் சரியாக நடைமுறைப்படுத்தப்படாததுதான்.
கோவை
இதுமட்டுமல்லாமல், இன்னொன்றையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். கேரள மாநிலத்தில் அண்மைக் காலமாக கரோனாவால்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. 22-07-2021 அன்று 12,818 என்றிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31-07-2021 அன்று 20,624 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, 9 நாட்களில் தினசரி பாதிப்பு கிட்டத்தட்ட எட்டாயிரம் உயர்ந்துள்ளது. எனவே, கேரளாவிலிருந்து கோயம்புத்தூர், தேனி, கன்னியாகுமரி வழியாகத் தமிழ்நாட்டிற்குள் வருபவர்களைத் தீவிரமாகக் கண்காணிப்பது மிகவும் அவசியம்.
தளர்வு இன்றி ஊரடங்கு
கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவதை முதல்வர் நன்கு அறிவார். அதனால்தான், 30-7-2021 அன்று முதல்வரின் செய்தி வெளியீட்டின் தலைப்பிலேயே "தமிழ்நாட்டில் கூடுதல் தளர்வுகளின்றி ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு" என்றும், "விதிமுறைகளைக் கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறைக்கு அறிவுரை" என்றும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
Recommended Video
சமூக இடைவெளி
இதுதவிரச் சென்னையில் ஒன்பது இடங்களில் கடைகள் செயல்படத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. சில வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. இருப்பினும், தடை விதிக்கப்படாத பகுதிகளில் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும், அனைவரும் முகக் கவசம்அணிந்திருக்கிறார்களா என்பதையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் அளவுக்குதான் கடைகளுக்குள் மக்கள் கூட்டம் இருக்கிறதா என்பதையும், இதே கட்டுப்பாடுகள் வழிபாட்டுத் தலங்களிலும், சுற்றுலாத் தலங்களிலும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதையும் கண்காணித்து நடைமுறைப்படுத்துவதில் சுணக்கம் நிலவுவதாகத் தெரிகிறது. கட்டுப்பாட்டு விதிகள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன என்ற தகவலும் வந்து கொண்டிருக்கிறது.
நடவடிக்கை தேவை
எனவே, முதல்வர் இதில் தனிக் கவனம் செலுத்தி, கட்டுப்பாட்டு விதிகள் கடைப்பிடிக்கப்படுவதை நூறு விழுக்காடு உறுதி செய்து, மூன்றாவது அலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களைக் காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''. இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.