ஹோண்டா சிட்டி காரில் தனியாக சென்ற ஓ.பன்னீர்செல்வம்! யாருடன் ரகசிய சந்திப்பு? பரபரப்பான அரைமணி நேரம்!
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தன்னந்தனியாக கட்சிக்கொடி கட்டாத ஹோண்டா சிட்டி காரில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த ரகசிய பயணத்தின் போது உதவியாளர் உட்பட யாரையும் அவர் உடன் வைத்துக்கொள்ளவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
பல ஆண்டுகளாக தன்னிடம் ஓட்டுநராக உள்ள வாசுவை மட்டும் கார் ஓட்டுவதற்காக உடன் வைத்துக் கொண்டார் ஓ.பன்னீர்செல்வம்.
அதிமுக பொதுக்குழு
அதிமுகவில் அரங்கேறி வரும் அரசியல் கூத்துகளுக்கு மத்தியில் நேற்று முன் தினம் தான் சொந்த ஊரான தேனிக்கு சென்றார் ஓ.பன்னீர்செல்வம். அதற்குள் அவர் இல்லாத நேரமாக பார்த்து சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார் எடப்பாடி பழனிசாமி. இதனால் ஊருக்கு போன வேகத்திலேயே நேற்று மீண்டும் அரக்க பறக்க சென்னை வந்து சேர்ந்தார் ஓபிஎஸ்.
ரகசிய பயணம்
இந்நிலையில் இன்று காலை முதல் வீட்டில் ஆலோசனை நடத்திய ஓ.பன்னீர்செல்வம் பிற்பகல் 3.30 மணியளவில் தனது வீட்டிலிருந்து திடீரென எங்கேயோ புறப்பட்டுச் சென்றார். வழக்கமாக பயணிக்கும் இன்னோவா காரை தவிர்த்து தாம் பயணிப்பதே வெளியே தெரியாத வண்ணம் கருப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஹோண்டா சிட்டி காரில் பயணித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். பிஎஸ்ஓ, கட்சியினர் என யாரையும் தன்னுடன் வர வேண்டாம் எனக் கூறிவிட்டு ஓட்டுநர் வாசுவை மட்டும் உடன் அழைத்துச் சென்றார்.
யாருடன் சந்திப்பு
ஓ.பன்னீர்செல்வம் இப்படி மறைந்து மறைந்து சென்று யாரை ரகசியமாக சந்திருக்கக் கூடும் என்ற விவாதம் அவரது வீட்டில் திரண்டிருந்த கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக பொதுக்குழு தொடர்பாக சட்ட நுணுக்கங்களை அறிவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதியை ஓ.பன்னிர்செல்வம் சந்தித்து ஆலோசனை பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அவர் வேறு எங்கும் சென்றிருக்கக் கூடுமோ என்ற பேச்சும் இருக்கிறது.
மதிய நேரம்
ஓ.பன்னீர்செல்வம் வீட்டில் செய்தியாளர்கள் எப்போதுமே இருக்கிற சூழலில் அவர்கள் மதிய உணவுக்காக கலைந்த நேரம் பார்த்து அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார். வழக்கமாக மதியம் 3.30 மணிக்கு ஓபிஎஸ் வீட்டில் ஓய்வில் இருப்பார், தொந்தரவு செய்ய வேண்டாம், மாலை தான் ஆலோசனை நடத்துவார், அப்போது சென்று கொள்ளலாம் என கட்சியினரும் அந்த நேரத்தில் அங்கு இல்லாதது ஓபிஎஸ் க்கு வசதியாக போய்விட்டது.