"பாஜக ஆதரவு.." நிலைப்பாட்டை எடுத்த பிறகும் புதிய நீதி கட்சி தலைவர் ஏசி.சண்முகத்தை சந்தித்த ஓபிஎஸ்
சென்னை: ஈரோடு இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு கோரியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவைத் தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானது. அங்கு திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அதிமுக கூட்டணியில் இருந்து யார் போட்டியிடுவார் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
தேர்தல் கொங்கு மண்டலத்தில் நடக்கும் நிலையில், அதிமுக தனது பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் தீவிரமாக உள்ளது. இருப்பினும், எடப்படி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் என இரு தரப்பும் தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனால் ஏற்கனவே குழப்பத்தில் உள்ள தொண்டர்கள் மீண்டும் குழம்பியுள்ளனர். இரு தரப்பும் கூட்டணிக் கட்சிகளைச் சந்தித்து ஆதரவு கோரும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

இந்தச் சூழலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தங்களுக்கு ஆதரவு தருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஓபிஎஸ் ஆதரவு கோரியுள்ளார். சென்னையில் உள்ள புதிய நீதிக்கட்சி அலுவலகத்தில் ஏ.சி.சண்முகத்தை நேரில் சந்தித்தார் ஓபிஎஸ்.
முன்னதாக நேற்றைய தினம் தான் எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், கோகுல் இந்திரா உள்ளிட்டோர் ஏ.சி.சண்முகத்தை சந்தித்து ஆதரவு கோரியிருந்தனர்.
இருப்பினும், எடப்பாடி பழனிசாமி தரப்பு விடுத்திருந்த கோரிக்கை நிராகரித்த ஏ.சி.சண்முகம், பாஜக இருக்கும் பக்கமே தான் இருப்பேன் என்றும் பாஜக எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவேன் என்றும் கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.












Click it and Unblock the Notifications