சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பற்றி எரிந்த ஆம்னி பேருந்து.. உயிர் தப்பிய பயணிகள்
சென்னை: செம்பரம்பாக்கம் அருகே சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மின்சாரத்தில் இயங்கும் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்தது. தீ மளமளவென பரவியதால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு இறங்கி ஓடினர்.
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து பெங்களூருக்கு தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று காலை சென்று கொண்டிருந்தது. இது மின்சாரத்தில் இயங்கும் இ-பேருந்தாகும். இந்த பேருந்தில் 30 பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த பேருந்து பூந்தமல்லியையடுத்த பாப்பாசத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த பேருந்து எதிர்பாராத விதமாக மோதியது. இதில் மின்சார பேருந்து தீப்பற்றி எரிந்தது. இதனால் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி உயிர்தப்பினர்.
இதற்கிடையே அருகில் இருந்தவர்கள், அந்த வழியாக வந்த தண்ணீர் லாரியை மடக்கி, தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீ கட்டுக்குள் வருவதுபோல் இருந்தது. பேட்டரியில் இயங்கும் பேருந்து என்பதால், ஸ்பார்க்காகி தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் பலரும் தெறித்து ஓடினர். உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் பேருந்து முழுவதும் எரிந்து சேதமாகியது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் தீ பற்றிய பேருந்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். காலை நேரத்தில் பேருந்து தீ பற்றியதால் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications