தீபாவளி கொள்ளை.. சென்னையிலிருந்து கிளம்பும் ஆம்னி பஸ்களில் இப்போ எவ்வளவு கட்டணம் தெரியுமா?
சென்னை: தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் பஸ் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று, அரசு என்னதான் உத்தரவிட்டாலும், பகிரங்கமாகவே அதிக கட்டணம் வசூலிக்கப்படத்தான் செய்கிறது.
செல்போன் ஆப்களில் இதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். பிற நாட்களுக்கும், பண்டிகை காலங்களுக்கும் நடுவே டிக்கெட் விலையில் மலைக்கும், மடுவிற்கும் நடுவேயான வித்தியாசம் உள்ளது. இதை அரசு கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.

சில உதாரணங்களை மட்டும் இங்கே பார்க்கலாம்.
நாளை, ஞாயிற்றுக்கிழமை சென்னையிலிருந்து திருநெல்வேலி செல்லும் ஆம்னி பஸ்களின் டிக்கெட் விலைகளை பாருங்கள்.. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதை போன்று பிற ஊர்களுக்கும் நீங்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ள முடியும்.
மாலை 4.30 மணிக்கு கிளம்பும் மெர்சிடஸ் பென்ஸ் மல்டி ஆக்சில் செமி-ஸ்லீப்பர் பஸ் ஒன்றின் கட்டணம் ரூ.1,850
மாலை 5.30 மணிக்கு கிளம்பும் ஒரு பிரபல பஸ் நிறுவன ஏசி, ஸ்லீப்பர் பஸ் கட்டணம் ரூ.1,950.
மாலை 5.30 மணிக்கு கிளம்பும் மற்றொரு பிரபல நிறுவன ஏசி ஸ்லீப்பர் பஸ் கட்டணம் ரூ.1850.
மாலை 6 மற்றும் இரவு 8 மணிக்கு கிளம்பும் வெவ்வேறு ஏசி ஸ்லீப்பர் பஸ் கட்டணம் ரூ.2,250.
சில பஸ் நிறுவனங்கள் கொஞ்சம் மனசாட்சியோடு நடந்துகொள்கின்றன. ரூ.900 முதல் ரூ.1000 வரையில் அவைகளில் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் கவனிக்க முடிந்தது. ஆனால், தீபாவளி நாளிலோ, அதற்கு அடுத்த நாட்களிலோ இந்த கட்டணம் என்பது ரூ.800 என்ற அளவில் இருக்கிறது.
பண்டிகையை முன்னிட்டு மட்டுமே இதுபோல கூடுதல் கட்டணங்களில் பஸ் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படுவது அம்பலமாகியுள்ளது.












Click it and Unblock the Notifications