அப்போ கொள்கை பேரன்.. இப்போ அவதூறு கருத்து.. பெரியார் குறித்து மாறி மாறி பேசும் சீமான்
சென்னை: உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ உறவு வைத்துக்கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா என்று தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளது பெரியார் ஆதரவாளர்கள் மற்றும் திராவிடர் கழகத்தினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, "உனக்கு உடல் இச்சை வந்தால் பெற்ற தாயோ, மகளோ, அக்காவோ, தங்கையோ, அவர்களுடன் உறவு வைத்து கொண்டு சந்தோஷமாக இரு என்று கூறியது பெண்ணிய உரிமையா? மதுவுக்கு எதிராக ஆயிரம் தென்னை மரங்களை பெரியார் வெட்டினார். அவரை பகுத்தறிவுவாதி என்று தானே கூறுகிறீர்கள்.

என் தோப்பில் கள் இறக்க அனுமதியில்லை என்று சொல்வது தான் அறிவு உள்ளவரின் செயல். மரத்தை வெட்டி சாய்த்தது பகுத்தறிவா? உலகில் எந்த நாட்டில் மது இல்லை. மது குடிக்க வேண்டாம் என்பது கட்டிய மனைவியுடன் படுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். சமூக நீதிக்கும் பெரியாருக்கும் சம்பந்தம் இருக்கா? சமூக நீதிக்கும் ஆனைமுத்துவுக்கும் சம்பந்தம் இருக்கா? சமூகநீதியை போராடி பெற்றுக்கொடுத்தது பெரியாரா? ஆனை முத்துவா?'' என்று கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறிய இந்த கருத்துக்கு திராவிடர் கழகம், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "சீமான் தனது பேச்சை வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்." என்று கூறியுள்ளனர்.
பெரியார் பற்றி சீமான் அவதூறு பரப்புவதால், அவரின் கருத்துக்கு ஆதாரம் கேட்டு தந்தை பெரியார் திராவிடர் கழகம் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன் சீமானின் வீட்டுக்கு செல்வோம் என்று அறிவித்துள்ளார். சீமான் பெரியார் குறித்தும் திராவிடம் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது இது முதல்முறை அல்ல.
கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெற்ற மகாகவி பாரதி பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய சீமான், "சமூக நீதியை எங்கு நிலை நாட்டி இருக்கிறார்கள். பெரியாரை விட பெரிய பெரியார் எங்கள் முன்னோர்களாக உள்ளனர். பெரியார் மட்டும் தான் எல்லாவற்றையும் பேசினார் என்பதை ஏற்க முடியாது." என்று கூறினார்.
இதேபோல கடந்த 2023 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த கூட்டத்தில் பேசிய சீமான், "சொத்தை ஏழைகளுக்கு எழுதி வைத்த முத்துராமலிங்க தேவர் சாதிய தலைவர். தன் சொத்துக்கு வாரிசு வேண்டும் என்பதற்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளர் ஆகிவிட்டார்." என்று பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
நாம் தமிழர் கட்சி தொடங்குவதற்கு முன்பும், கட்சி தொடங்கிய சிறிது காலமும் சீமான் பெரியாரை தலைவராக முன்னிலைப்படுத்திய பதிவுகளும் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. 2011 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சி வெளியிட்ட இன எழுச்சி மலரின் பின்பக்கத்தில் 64 தலைவர்களின் படங்கள் இடம் பெற்றிருந்தன. அதில் முதல் இடத்தில் பெரியாரின் படம் இடம்பெற்றுள்ளதை பெரியார் உணர்வாளர்கள் சமூகவலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள்.
மேலும் நாதக தொடங்கப்படுவதற்கு முன்பு திவிக தலைவர் கொளத்தூர் மணியுடன் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் சீமான் கருப்பு சட்டையுடன் பெரியார் படத்தைப் பார்த்து, "என்னுடைய ஐயாதான் எனக்கு தாத்தா. நான் அவருக்கு பேரன். ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேரன் என்பார். நான் கொள்கை பேரன். ஐயா இருந்திருந்தால் என்னைத்தான் பேரன் என்பார்." என்று பேசிய வீடியோவும் வைரலாகி வருகிறது.











Click it and Unblock the Notifications