அன்று ராமராஜன்.. இன்று ரஹ்மான்..! முன்பு கமல்.. பின்பு இமான்..! தமிழ் சினிமா கண்ட பிரேக் அப் சர்ச்சைகள்
சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உடனான திருமண உறவிலிருந்து விலகிக் கொள்வதாக அவரது மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ள நிலையில், திரைத்துறையைச் சேர்ந்தவர்களில் யார் எல்லாம் விவாகரத்து செய்துள்ளனர் என்பதைப் பற்றிய ஒரு பட்டியலை தயாரித்துள்ளோம்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு தன் வழக்கறிஞர் மூலம் அறிவித்திருக்கிறார். இதனால் 29 ஆண்டுகால குடும்ப வாழ்க்கை ஒரு முடிவுக்கு வந்துள்ளது. ரஹ்மானைப் போன்ற சாதுவான மனிதரை சினிமா உலகத்தில் பார்ப்பது கடினம். மிக மென்மையானவர். அவரை விட்டுப் பிரிய அவரது மனைவி எடுத்த முடிவு பலரை கலங்கடித்திருக்கிறது.

'ஒருவரை ஒருவர் ஆழமாக நேசித்த போதிலும் இவர்களுக்கு இடையே பல உணர்ச்சி போராட்டங்கள் இருந்துள்ளன. அந்தப் பதற்றங்களும் சிரமங்களும் அவர்களுக்கு இடையே தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கி இருக்கிறது. இந்த இடைவெளியை இனி சரி செய்ய முடியாது. ஆழமான முடிவுக்குப் பிறகே இந்தச் சவாலான முடிவை எடுத்துள்ளதாக' சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார்.
இன்றைய 2கே கிட்ஸ் உலகத்தில் பிரேக் அப் என்பது பெரிய வார்த்தை இல்லை. இளம் தலைமுறையைச் சேர்ந்த பலர் இதை ஒரு பிரச்சினையாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஒருவர் பல பிரேக் அப் செய்யலாம். அதற்காக பார்ட்டி வைத்துக் கொண்டாடலாம். அதுதான் இன்றைய ட்ரெண்ட். ஆனால், ரஹ்மான் பழைய தலைமுறை. குடும்ப உறவுகள் மீது அளவு கடந்த அன்பும் மரியாதையையும் கொண்டுள்ளவர். பிள்ளைகள் வளர்ந்து தங்களின் வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு வளர்ந்து விட்ட காலத்தில் இந்தத் தம்பதி பிரிவது என்பது ஒரு கடினமான முடிவு.
சினிமா வட்டாரத்தில் 1990களில் ராமராஜன் மற்றும் நளினி தம்பதி காதல் மணம் புரிந்து கொண்டபோது மிகப்பெரிய அளவில் அது செய்தியானது. அந்த ஜோடி 2000 இல் பிரிந்தபோது அதுவும் பெரிய செய்தியானது. ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்து பின்னர், நளினி அந்த விவாகரத்து முடிவு சரியானதுதான் என்று சமீபத்தில் பேசி இருந்தார்.

விவாகரத்து விசயத்தில் இந்த ஜோடிக்கு சீனியர் ராதிகா. அவர் பிரதாப் போத்தனை விட்டு பிரிந்ததும் பிறகு ஒரு வெள்ளைக்காரரை மணம் புரிந்ததும் அதைக் கடந்து சரத்குமாரை கரம் பிடித்ததும் எனப் பல அதிரடிகளைச் செய்தவர் ராதிகா. இதே விவாகரத்து பட்டியலில் அம்பிகா, ஊர்வசி, சரண்யா, ரேவதி, சுகன்யா, ரோகிணி, சரிதா எனப் பலரும் இணைந்துள்ளார்கள்.
சினிமா உலகில் காதல் மணம் என்றால் அது ஹைலைட் கமல் மற்றும் சரிகா ஜோடியின் திருமணம்தான். இவர்கள் 2004 இல் பிரிந்த போது அது பரபரப்பாகப் பேசப்பட்டது. அதன்பின்னர் கமல், நடிகை கவுதமியுடன் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தார். அதைப் பற்றி ஊடகங்கள் கேள்வி எழுப்பிய போது, 'என் வீட்டு பாத்ரூமை எட்டிப் பார்க்காதீர்கள்’ என்று அவர் பதில் கொடுத்தார். பின்னர் இந்த ஜோடியும் பிரிந்தது.

1989இல் புதிய பாதை திரைப்படம் வெளியான நடிகர் பார்த்திபனுக்கும் சீதாவுக்குமான காதல் செய்தி பரபரப்பாகப் பேசப்பட்டது. சீதா அவரை விட்டுப் பிரிந்த போது பார்த்திபன் பல வழிகளில் அதைப் பேட்டிகள் மூலம் வெளிப்படுத்தினார். ஆனால், சீதா அதைப் பெரிய அளவுக்கு அதைப் பற்றி விவாதிக்கவே இல்லை. இப்போது “ஊர் கூடி உறவைக் கொண்டாடி வழியனுப்புதல் போலே, ஊர் விலகி 'பிரிவு’ என்ற முடிவையும் சமமாய் மதித்து அமைதிக்கு உதவிட வேண்டும்” என்று ரஹ்மான் விவாகரத்து விசயத்தைப் பற்றி ஒரு ட்வீட் போட்டுள்ளார் பார்த்திபன்.
கடந்த சில ஆண்டுகளில் திரைத்துறையில் மிகப் பிரம்மாண்டமாக நடந்த திருமணங்களில் மிக முக்கியமானது ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஜோடி திருமணமும் ஒன்று. தடபுடலாக நடந்தது. சிறுவயதிலிருந்து காதலித்து கரம் பிடித்த இந்த ஜோடி சமீபத்தில் தங்களின் பிரிவை அறிவித்தது. அதைப் பற்றி ஜிவியின் தாயார் அளித்திருந்த பேட்டியில், தன் மகனின் தரப்பில்தான் ஏதோ சிக்கல் நடந்துள்ளது என்று கூறியிருந்தார். திருமணம் நடந்து பல காலங்கள் கடந்த நிலையிலும் இந்தத் தம்பதி வாரிசு இல்லாமல் இருந்துவந்தது. ஜிவி பிரகாஷ் தன் திருமணத்திற்குப் பிறகே கதாநாயகன் அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் லேசான மனக் கசப்புகள் இந்த ஜோடிக்குள் உருவானது. இறுதியில் பிரிவு உறுதியானது.

அதேபோல் தமிழ் சினிமாவின் பெரிய குடும்பமான ரஜினி வீட்டில் இரண்டு விவாகரத்துகள் நடந்தன. முதலில் இளைய மகள் சௌந்தர்யா ரஜினி காந்த் தன் மண முறிவை அறிவித்தார். அடுத்து ஐஸ்வர்யா தனுஷ் தன் பிரிவை வெளியிட்டார். அந்தப் பிரிவு நடக்கக் கூடாது எனப் பலர் நினைத்தனர். ஆனால், அப்படி நினைக்க வேண்டிய தனுஷ் அதைச் சகஜமாக எடுத்துக் கொண்டார்.
இந்த ஜோடி திருமணமான காலகட்டத்தில்கூட, தனுஷ் தன் பேட்டிகளில் ஐஸ்வர்யாவை மட்டம் தட்டியே பேட்டிகள் அளித்து வந்தார். குறிப்பாகச் சொன்னால், 'அவர்தான் என்னைத் தேடி வந்தார். நான் அவரைத் தேடிப் போகவில்லை' என்று ரீதியில் வெளிப்படையாக ஒரு தொலைக்காட்சி பேட்டியில் ஐஸ்வர்யாவைக் குறைத்து மதிப்பிட்டுப் பேசினார் தனுஷ்.
அப்போதே இந்த ஜோடிக்குள் ஏதோ சில முரண்பாடுகள் உள்ளன என்று சொல்லப்பட்டது. அமலா பால் இயக்குநர் விஜய்யை விட்டுப் பிரிந்த போது தனுஷ் பெயர் அதில் அடிபட்டது. ஊடகங்களில் தனுஷின் இமேஜ் மிக மோசமாக விமர்சிக்கப்பட்டது. அப்படி இருந்தும் தனுஷ் பெரிய அளவில் அதற்கு எல்லாம் பதிலளித்தது இல்லை. தனுஷுக்கு முன்பாகவே அவரது சகோதரர் செல்வராகவன் அவரது காதல் மனைவி சோனியா அகர்வாலை விட்டுப் பிரிந்தார். அப்போதும் தனுஷின் பெயர் சர்ச்சையில் சிக்கியது.

கோடம்பாக்கம் வட்டாரத்தில் அதிரடியான விவாகரத்து என்றால் அது இசையமைப்பாளர் டி.இமான் வாழ்க்கையில் நடந்ததுதான். வழக்கமாகத் திரை பிரபலங்கள் விவாகரத்து செய்தி வெளியாகும்போது கூடவே தனுஷ் தலையும் உருளும். ஆனால் இமான் விவகாரத்தில் அதற்கு நேர்மாறாக சிவகார்த்திகேயன் பெயர் அடிபட்டது. இமான் வெளிப்படையாகவே 'சிவகார்த்திகேயன் தனக்கு துரோகம் செய்துவிட்டார்' என்று கதறி ஒரு பேட்டியை அளித்தார். அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டிய சிவா மௌனமாகவே இருந்த நிலையில், இமானின் மனைவி அந்தப் புகாரை மறுத்தார்.
இசை உலகில் இமான் எந்தளவுக்குச் சர்ச்சைகளில் சிக்காதவரோ அதே அளவுக்கு குட் பாய் என்று பெயரை எடுத்த ஜெயம் ரவி தன் மனைவியை விட்டுப் பிரியப் போகிறார் எனச் செய்திகள் அடிபட ஆரம்பித்தன. ஆனால், அதைப் பற்றி சில மாதங்கள் வரை மவுனமாக இருந்த ரவி, திடீரென்று தன் மனைவியை விட்டுப் பிரிவதை உறுதி செய்தார்.












Click it and Unblock the Notifications