ஒரே மதம்.. மன்னராட்சி.. பாஜக முயற்சியை முளையிலேயே கிள்ளியெறிய வேண்டும்.. துரைமுருகன் கொதிப்பு
சென்னை: நாட்டை ஒரே மதமுள்ள நாடாக மாற்ற பாஜக முயற்சி செய்வதாக துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார். தொகுதி மறு வரையறை திட்டத்தில் தென்னிந்திய, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க கூடிய சூழ்ச்சி இருக்கிறது.இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் 2 தனி தீர்மானங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானத்தின் மீது அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, நாட்டை ஒரே மதமுள்ள நாடாக மாற்ற பாஜக முயற்சி செய்கிறது. நாட்டில் மன்னராட்சியை அமல்படுத்த பாஜக முயற்ச்சிப்பதால் தான் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. நமது உரிமைகள் பறிபோகாமல் இருப்பதற்காக, ஜனநாயகத்தை காக்கவே ஒரு தனி தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம் என்று இப்படி போகும் திட்டம் ஒத்து வராது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தில் உள்ள பாதகங்கள் குறித்து திமுக சார்பில் அந்த திட்டம் சார்ந்த குழுவிடம் தெரிவித்துள்ளோம் என்றார். மேலும் அவர் பேசியதாவது, உள்ளாட்சித் தேர்தலுக்கு ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை ஒத்துவராது என அம்மையார் ஜெயலலிதா அவர்கள் கூறியிருக்கிறார். இன்று உள்ளாட்சித் தேர்தலையும் இணைக்க பார்க்கிறார்கள். அதனால் திமுக சார்பில் அந்த தீர்மானங்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்றார்.
இதன்பின், அதிமுக சார்பில் 10 கோரிக்கைகளை ஒரே நாடு, ஒரே தேர்தல் குழுவுக்கு அளித்துள்ளதாக அதிமுக எம்.எல்.ஏ தளவாய் சுந்தரம் கூறினார். இதற்கு பதிலளித்து அமைச்சர் கூறுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே கடவுள், ஒரே மதம் என பேசுபவர்களிடம் இதை வைப்பதே தேவையற்றது.
ஆனாலும் நம்பிக்கையோடு வைத்துள்ளீர்கள் என கூறிய அமைச்சர் துரைமுருகன், தொகுதி மறு வரையறை திட்டத்தில் தென்னிந்திய, தமிழ்நாட்டு மக்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க கூடிய சூழ்ச்சி இருக்கிறது. இந்த முயற்சியை முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தனி தீர்மானங்களுக்கு காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், மமக உள்ளிட்ட பேரவையில் கட்சிகள் ஆதரவு தெரிவித்து பேசினார். இதன்பின் 2 தனித்தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.












Click it and Unblock the Notifications