ஆன்லைன் ரம்மி விவகாரம்- ஆளுநர் ரவிக்கு சாம்பல் அனுப்பும் போராட்டம் நடத்திய மாஜி அமைச்சர்!
ஆன்லைன் ரம்மி தடை விவகாரத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக பெரியாரிஸ்டுகள் நூதனப் போராட்டம் நடத்தினர்.
சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சாம்பல் அனுப்பும் போராட்டத்தை முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று நடத்தினர்.
தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் ஆன்லைன் சூத்தாட்டத்திற்கு தடை விதித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கடந்த பல மாதங்களாக இந்த மசோதாவை கிடப்பில் போட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென இம்மசோதாவை தமிழ்நாடு அரசுக்கு திருப்பி அனுப்பி வைத்தார்.

தமிழ்நாடு அரசு முதல் முறையாக மசோதாவை அனுப்பிய போது உரிய விளக்கம் கேட்டு அந்த மசோதாவை ஆளுநர் ரவி திருப்பி அனுப்பினார். மீண்டும் விளக்கம் அளித்து மசோதா அனுப்பப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் இல்லை என 2-வது முறையாக திருப்பி அனுப்பிவிட்டுள்ளார். இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த நடவடிக்கைக்கு எதிராக பெரும்பாலான அர்சியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன. இது தொடர்பாக கருத்து தெரிவித்திருந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, ஆளுநர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சித் தலைவராகவே தம்மை கருதுகிறார். தற்போது கூட்டப்படும் சட்டசபை கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிரான தடையை அமல்படுத்தி ஆளுநருக்கு அனுப்பினால் சட்டப்பிரிவு 200வது பிரிவின் கீழ் அதற்கு அவர் ஒப்புதல் அளித்தே தீர வேண்டும் என சுட்டிக்காட்டி இருந்தார்.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஆனூர் ஜெகதீசன் தலைமையிலான தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் இன்று சென்னையில் ஆளுநர் ரவியைக் கண்டித்து நூதனப் போராட்டம் நடத்தினர். ஆன்லைன் சூதாட்டங்களால் தற்கொலை செய்து கொண்டோர் சாம்பலை ஆளுநர் ரவிக்கு அனுப்பி வைக்கும் நூதனப் போராட்டத்தை பெரியார் தி.க.வினர் நடத்தினர்.












Click it and Unblock the Notifications