ஆன்லைனில் மணல்.. இனி இவங்களுக்கு மட்டும்தான் மணல் வழங்க வேண்டும்.. கோட்டையில் விழுந்த லெட்டர்.. ஏன்?
சென்னை: தமிழக மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை உள்ளிட்ட காரணங்களால் ஆற்று மணல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதுகுறித்து தமிழக அரசுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றும் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்ட விரோத பணப்பரிமாற்ற புகார்கள் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அடிக்கடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.. இதில் அமைச்சர்கள் வீடுகளும் தப்பவில்லை.

அமைச்சர்கள்: அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற அடிப்படையில் சில மணல் குவாரி ஒப்பந்ததாரர்களும் சிக்கியிருக்கிறார்கள்.. எனவே, இவர்கள் தொடர்புடைய 30-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டன..
இதில் திருச்சி, கரூர், வேலூர், திண்டுக்கல், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 5 மணல் குவாரிகளிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு பிறகு, யார்டுகளில் லாரிகளுக்கு மணல் வழங்கும் பணிகள் முடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகின.. அதாவது, 104 இடங்களில் மணல் குவாரிகள் இருந்தும் 15 இடங்களில் தான் குவாரிகள் செயல்படுகிறதாம்.
500 கோடி இழப்பு: இதையடுத்து, தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி உரிமையாளர்கள் நலசங்க தலைவர் ஐ.கே.எஸ்.நாராயணன் கடந்த வாரம் இதுகுறித்து அரசுக்கு ஒரு கோரிக்கை விடுத்திருந்தார்.. அதில், ஆன்லைன் முறையில் மக்கள் பணம் செலுத்தினாலும், லாரிகளுக்கு யார்டுகளில் மணல் அள்ளிப் போடும் பணியில் ஈடுபடுபவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள். பணம் செலுத்தியவர்களுக்காக மணல் அள்ளிச் சென்ற லாரிகள் மணலுக்காக காத்திருக்கின்றன. இதனால், ரூ.500 கோடி வரை இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட லாரிகள் மணல் அள்ளும் "ஸ்டாக் பாயிண்டில்" ஒரு வாரமாக நின்று கொண்டிருக்கின்றன.. பசியும், பட்டினியுமாக காத்து கிடக்கும் லாரி உரிமையாளர்களும், மிகுந்த மன உளைச்சல் அடைந்து உள்ளதால், முதல்வர் ஸ்டாலின் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, மறுபடியும், மணல் குவாரிகள் செயல்பட நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும்" என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
யுவராஜ் கோரிக்கை: இந்நிலையில், தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் எஸ்.யுவராஜ் ஒரு கோரிக்கையை எழுப்பியிருக்கிறார்.. இது தொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார்.
அந்த கடிதத்தில், "தமிழக மணல் குவாரிகளில் நடத்தப்பட்ட அமலாக்கத் துறை சோதனை உள்ளிட்ட காரணங்களால் ஆற்று மணல் பற்றாக்குறை நிலவி வருகிறது. இந்த தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி, தரமற்ற எம்-சாண்ட் விற்பனை அதிகரித்துள்ளது. எனவே, எம்-சாண்ட் உற்பத்தி செயல்முறைகளுக்கான சட்ட விதிகளை அரசு வகுக்க வேண்டும்.
முறைகேடுகள்: மேலும், ஆந்திர மாநிலத்தில் குறைந்த விலைக்கு மணல் கிடைக்கிறது. அம்மாநில அரசிடம் உடன்படிக்கை செய்து குறைந்த விலையில் மணல் பெற்று, தட்டுப்பாட்டைப் போக்க வேண்டும். அதே நேரம், இணையவழியில் பதிவு செய்தால் மட்டுமே மணல் வழங்கும் நடைமுறையை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இதன் மூலம் முறைகேடுகளைத் தடுக்கலாம். கட்டுமானப் பொருட்களுக்கான விலை நிர்ணயக் குழுவையும் அரசு அமைக்க வேண்டும்" என்று கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications