ஹஜ் யாத்திரை செல்ல ஆசையா? “நோ கண்டிஷன்”.. ஆன்லைன் விண்ணப்ப காலம் நீட்டிப்பு! ஹஜ் கமிட்டி அறிவிப்பு
2023 ல் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளைபோல் அதிக எண்ணிக்கையிலான யாத்திரிகர்களுடன் ஹஜ் நடைபெற உள்ளது
சென்னை: புனித ஹஜ் பயணம் செல்ல விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை மார்ச் 20 ஆம் தேதி வரை இந்திய ஹஜ் கமிட்டி நீட்டித்து இருக்கிறது. அனைத்து வயதினரும் ஹஜ் பயணம் செய்யலாம் என்று சவூதி அரேபிய அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் கூடுதல் ஹஜ் பயணிகள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்று ஹஜ். ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளை சேர்ந்த 20 முதல் 30 லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமிய மக்கள் சவூதி அரேபியாவின் மக்கா நகருக்கு புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காக வருகை தருகிறார்கள்.
லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் இருந்தும் ஹஜ் யாத்திரை செல்வதற்காக சவூதி அரேபியாவுக்கு விமான மூலம் செல்வது வழக்கமான ஒன்றாக உள்ளது.

கொரோனா கட்டுப்பாடு
கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சவூதி அரேபியா உட்பட உலகின் பல நாடுகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு விமான போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது. இதன் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு 2020 ஆம் ஆண்டு முதல் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

60 ஆயிரம் பேர்
வெளிநாட்டினர் ஹஜ் பயணம் செய்ய தடை விதித்த சவூதி அரேபியா அரசு, தங்கள் நாட்டை சேர்ந்த ஆயிரம் பேரை மட்டும் யாத்திரை செல்ல அனுமதித்தது. அடுத்த ஆண்டு சவூதி அரேபியாவில் வசித்து வந்த 60,000 பேருக்கு மட்டும் அந்நாட்டு அரசு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளித்தது.

10 லட்சம் பேர் யாத்திரை
கடந்த முறை கொரோனா தாக்கம் குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதை அடுத்து, பல நாடுகளை சேர்ந்த 10 லட்சம் பேருக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதே சமயம் 65 வயதுக்கு அதிகமான முதியோர்கள் ஹஜ் யாத்திரை வர அனுமதி இல்லை என்ற சவூதி அரசின் கட்டுப்பாடு மட்டும் தொடர்ந்து வந்தது.

வயது வரம்பு இல்லை
இந்த நிலையில் 2023 ல் கொரோனாவுக்கு முந்தைய ஆண்டுகளைபோல் அதிக எண்ணிக்கையிலான யாத்திரிகர்களுடன் ஹஜ் நடைபெறும் என்றும், ஹஜ் பயணம் மேற்கொள்ள விதிக்கப்பட்ட வயது வரம்பு ரத்து செய்யப்பட்டு அனைத்து வயதினரும் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் சவூதி அரேபிய அமைச்சர் ஃபவ்சான் அல் ரபியா கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தார்.

இந்திய ஹஜ் கமிட்டி
இந்தியாவில் தனியார் பயண நிறுவனங்கள் மட்டுமின்றி மத்திய அரசின் சிறுபான்மை நலத்துறையின் கீழ் வரும் இந்திய ஹஜ் கமிட்டி ஹஜ் பயணத்துக்கு மக்களை அழைத்து சென்று வருகிறது. இந்த நிலையில்தான் இன்று தமிழ்நாடு அரசு சிறுபான்மை நலத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

விண்ணப்பம் நீட்டிப்பு
அதில், "இந்திய ஹஜ் குழுவானது, புனித ஹஜ் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் கடைசி தேதியினை 20.03.2023 வரை நீட்டித்துள்ளது. ஆன்லைன் விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழு இணையதளம் மூலம் அதாவது www.hajcommittee.gov.in என்ற இணையம் வழியாக (அல்லது) மும்பை இந்திய ஹஜ் குழுவின் "HCol" செயலியினை கைபேசியில் பதிவிறக்கம் செய்வதன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?
இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் 20.03.2023 அன்று அல்லது அதற்கு முன்னர் வழங்கப்பட்டு குறைந்தது 03.02.2024 வரையில் செல்லத் தக்க இயந்திரம் மூலம் படிக்கத்தக்க பாஸ்போர்டின் முதல் மற்றும் கடைசி பக்கம், வெள்ளை பின்னணியுடன் கூடிய சமீபத்திய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், குழுத் தலைவரின் ரத்து செய்யப்பட்ட காசோலை நகல் அல்லது IFSC குறியீட்டுடன் கூடிய சேமிப்பு வங்கிக் கணக்கு புத்தக நகல் மற்றும் முகவரிச் சான்றின் நகல் ஆகியவற்றை பதிவேற்றம் செய்யவேண்டும். கூடுதல் விவரங்கள் அறிய விண்ணப்பதாரர்கள் இந்திய ஹஜ் குழு இணையதள முகவரி (www.hajcommittee.gov.in)-ஐ தொடர்பு கொள்ளலாம்." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications